வாலு போச்சு கத்தி வந்தது டும்டும்... தினகரன் போய் திவாகரன் வருகிறார் டும்டும்!
அதிமுகவை விட்டு தினகரன் ஓடிவிட்டதாலேயே சசிகலா குடும்பம் ஒதுங்கிவிடவில்லை. இப்போது திவாகரன் கட்டுப்பாட்டுக்கு கைமாறுகிறது அதிமுக.
சென்னை: அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பம் முழுமையாக துரத்திவிடப்பட்டது என்பதை அவ்வளவு எளிதாக நம்பிவிடமுடியுமா? சசிகலா இப்போது தம்பி திவாகரனை களத்தில் இறக்கிறார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
கால்நூற்றாண்டு காலமாக அதிமுகவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது சசிகலா குடும்பம். நேரடி அரசியலில் இல்லாமல் ஜெயலலிதாவுக்கு நெருக்கம் என காட்டிக் கொண்டே தமிழகத்தையே சூறையாடியது சசிகலா கோஷ்டி.
சசிகலாவின் அத்தனை சொந்தங்களும் இந்த வேட்டைப் பணத்தில் வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். அத்துடன் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரையும் கப்பம் செலுத்துகிற ஏஜெண்டுகளாக மாற்றியும் வைத்திருந்தனர்.
சசிகலா, தினகரனுக்கு செக்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் ஆட்டம் நேரடி அரசியலாக பரிணமித்தது. ஆனால் மத்திய பாஜக அரசோ இந்த சசியாட்டத்தை சசிக்க அனுமதிக்கவில்லை. சசிகலாவைத் தொடர்ந்து தினகரனுக்கும் வசமான செக் வைத்துவிட்டது.
சசி குடும்பம் ஒதுக்கி வைப்பு
இதனால் அதிமுக அமைச்சர்களே, தினகரன் குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கிறோம் என பிரகடனம் செய்தனர். தினகரனும் ரொம்ப நல்லவர்போல, நானும் ஓடிப் போய்விடுகிறேன் என அறிவித்திருக்கிறார். ஆனால் இது அனைத்துமே நாடகம்தான் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
களத்தில் திவாகரன்
இந்த நாடகத்தை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய காட்சிகளுக்குப் பின்னால் இருப்பது சசிகலாவின் தம்பி திவாகரன் என்பது அம்பலமாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலையை மீட்க தினகரன் புரோக்கர் மூலம் பேரம் பேசிய அதே காலகட்டத்தில் காங்கிரஸின் சல்மான் குர்ஷித்தை தங்களுக்காக வாதாட களமிறக்கியவர் திவாகரன்.
எடப்பாடிக்கு திவாகரன் ஆதரவு
அத்துடன் தம்மை ஓரம்கட்டிய தினகரனை துரத்த எடப்பாடிக்கு வலது கரமாக தமது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களையும் களமிறக்கினார் திவாகரன். சசிகலாவைப் பொறுத்தவரையில் அதிமுக ஆட்சி எனும் பொன்முட்டையிடும் வாத்தை அவ்வளவு எளிதாக கை கழுவிவிட விரும்பவில்லை. அதனால்தான் திவாகரனை களமிறக்கிவிட்டிருக்கிறார்.
கொல்லைப்புற அரசியல்
இப்போதைக்கு சசிகலா குடும்பம் இல்லாத அதிமுக என்கிற் தோற்றம் இருக்கிறது. இதை அப்படியே வைத்துக் கொண்டு கொல்லைப் புறமாக அதிமுகவை ஆட்டி வைப்பது என்பதுதான் சசிகலா கோஷ்டியின் தற்போதைய திட்டம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.