முதல்வர் பதவிக்கு மூக்கு வேர்க்கும் தம்பிதுரை- கடும் கோபத்தில் எடப்பாடி கோஷ்டி!
சசிகலா குடும்பத்துடன் எடப்பாடி அணி மல்லுக்கட்டுவதால் தமக்கு முதல்வர் பதவி விரைவில் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறாராம் தம்பிதுரை.
சென்னை: சசிகலா குடும்பத்துக்கு தனி ஆவர்த்தனத்தை எடப்பாடி தொடங்கிவிட்ட நிலையில் தாம் விரைவில் முதல்வராகிவிடுவோம் என மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை. இதனால் கொங்கு கோஷ்டி தம்பிதுரை மீது கடும் கோபத்தில் இருக்கிறதாம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை கடந்த வாரம் சந்தித்தார் தம்பிதுரை. அவர் சந்தித்துவிட்டு வந்த பிறகு, தினகரனும் சசிகலாவை சந்தித்துப் பேசினார்.
சசிகலாவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தம்பிதுரை ஆலோசித்ததாக தகவல் வெளியானது. இதன் பிறகு பேட்டியளித்த தம்பிதுரை, பா.ஜ.க வேட்பாளரை ஆதரிப்பதற்கு சசிகலா ஒப்புதல் கொடுத்தார். பா.ஜ.கவுக்கு ஆதரவு என்பது சசிகலாவும் சேர்ந்து எடுத்த முடிவுதான் என அதிர வைத்தார்.
தம்பிதுரை மீது சீற்றம்
இதற்கு எதிராகப் பேசிய எம்.பி அரி, தம்பிதுரை ஏன் இப்படிப் பேசினார் எனத் தெரியவில்லை. இப்படியொரு இரட்டை நிலைப்பாடு ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். அதிமுகவினரோ, தம்பிதுரையின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவதற்காகத்தான், அரியை பேச வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
முதல்வர் பதவி
இவ்வளவு நாட்கள் இல்லாமல், சசிகலா மீது தம்பிதுரை திடீர் பாசம் காட்டுவதற்கும் காரணம் இருக்கிறது. அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதாவின் இறுதி நாட்களில், முதல்வர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது? என்ற கேள்வி வந்தபோது, தம்மை முன்னிலைப்படுத்த விரும்பினார் தம்பிதுரை. ஆனால் டெல்லி ரசிக்கவில்லை.
ஓபிஎஸ் வெளியேற்றம்
இதனால் ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவி கிடைத்தது. இதை விரும்பாத சசிகலா கோஷ்டி குடைச்சல் கொடுக்க அவர் தனி கோஷ்டியாக உருவெடுத்துவிட்டார்.
அன்று கொந்தளிப்பு
டெல்லியில் ஓபிஎஸ் செல்வாக்குடன் இருந்தபோது, மோடியை சந்திக்க பலமுறை முயன்றார் தம்பிதுரை. ஒருகட்டத்தில், ' மக்கள் பிரச்னைகளுக்காகக்கூட பிரதமரை சந்திக்க முடியவில்லை. மிகவும் எரிச்சலாக இருக்கிறது' எனக் கொந்தளித்தார்.
எடப்பாடி முதல்வர் நாற்காலியில்
ஓபிஎஸ் பதவி விலகிய பிறகும் முதல்வர் பதவியை நோக்கி நகர விரும்பினார் தம்பிதுரை. இதற்குப் பதில் அளித்த பா.ஜ.க மேலிடம், தம்பிதுரை பதவியில் உட்கார்ந்தால் ஆறு மாதத்தில் தேர்தலை சந்திக்க வேண்டும் எனக் கூறி எடப்பாடியை சிம்மாசனத்தில் அமர அழைத்தது.
எடப்பாடி கலகக் குரல்
எடப்பாடியின் லாபி லிஸ்டில் இருக்கும் ஆளுநர்தான் இத்தனைக்கும் காரணகர்த்தாவாக இருந்தார். தற்போது சசிகலாவுக்கு எதிராக எடப்பாடியும் கலகக் குரல் எழுப்ப தொடங்கிவிட்டார்.
நிச்சயம் முதல்வராவோம்
தம்பிதுரையைப் பொறுத்தவரையில், விரைவில் எடப்பாடி பழனிசாமி அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு சசிகலா குடும்பமே ஏற்பாடு செய்யும். அப்போது தாம் முதல்வராகிவிடுவோம் என கனவு காண்கிறார். இதற்கான சில திரைமறைவு வேலைகளையும் தம்பிதுரை மேற்கொள்ள கொங்கு கோஷ்டி கடுங்கோபத்தில் இருக்கிறதாம்.