ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன் தமிழகத்தில் ஆட்சிக் கலைப்பா… வெங்கய்ய நாயுடு பரபரப்பு பதில்
ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன் தமிழகத்தில் 356 சட்டப் பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
சென்னை: ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படாது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வெங்கய்ய நாயுடு, "இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டியை ஏற்றுக் கொண்டு விட்டது. ஜிஎஸ்டியில் பிரச்சனை ஏதாவது இருந்தால் அது கவுன்சிலில் சரி செய்வோம்" என்று கூறினார்.
மேலும், ஜிஎஸ்டியை பொறுத்தவரை காங்கிரஸ் இரட்டை நிலை எடுத்து பேசுகிறது என்றும், எந்தப் புதிய திட்டம் வந்தாலும் தொடக்கத்தில் சிக்கல் இருக்கும் என்று வெங்கய்யா கூறினார்.
பேசி தீர்த்துக் கொள்ளலாம்..
ஜிஎஸ்டியில் உள்ள பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம். எத்தனை சதவீதம் வரி விதித்தாலும், வரி முற்றிலுமாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் பலர் நினைக்கிறார்கள் என்று வெங்கய்யா தெரிவித்தார்.
வரி அவசியம்
நாட்டுக்கு வரி அவசியம். ஜிஎஸ்டி கவுன்சில் அவ்வப்போது கூடி வரி விகிதத்தை மாற்றி அமைக்கும் என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். மேலும், அண்மையில் உரத்தின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் ஆட்சிக் கலைப்பா?
இதனிடையே தமிழகத்தில் ஆட்சி கலைப்பு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன் தமிழகத்தில் ஆட்சிக் கலைப்பு இருக்காது என்று வெங்கய்ய நாயுடு கூறினார். மேலும், எக்காலத்திலும் 356 பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
எம்எல்ஏக்களே முடிவு செய்வார்கள்
மேலும், தமிழகத்தில் யார் முதல்வராக இருக்க வேண்டும் என்பதை அக்கட்சியின் எம்எல்ஏக்களே முடிவு செய்வார்கள் என்றும் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். மேலும், அதிமுகவில் நடக்கும் பிரச்சனை உட்கட்சி பிரச்சனை என்று அவர் கூறினார்.