அச்சத்தில் அமைச்சர்கள்... ஆவென வாய்பிளந்து காத்திருக்கும் எம்எல்ஏக்கள்... அடங்காத அதிமுக
கூவத்தூரைவிட இரண்டு மடங்கு ஆசையில் இருக்கிறார்கள் எம்.எல்.ஏக்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தத் தயாராகி வருகிறது தினகரன்-திவாகரன் கோஷ்டி.
சென்னை: ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று அமைச்சர்கள் அச்சத்தில் இருக்க, அதிக பண ஆசையில் அதிமுக எம்எல்ஏக்கள் காத்திருக்கின்றனர். எம்எல்ஏக்களை பணத்தால் வளைக்க மன்னார்குடி கோஷ்டி திட்டமிட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் மத்தியில், ஆட்சிக் கவிழ்ப்பு குறித்த அச்சம் இருந்தாலும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் உற்சாகத்துடன் வலம் வருகின்றனர். ' இரண்டாம்கட்ட அறுவடைக்கான நேரம் நெருங்கிவிட்டது. கூடுமான வரையில் லாபம் பார்த்துவிட வேண்டும்' என்ற எண்ணத்தில், நடப்பதை கவனித்து வருகின்றனர்.
எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு
மாவட்டங்களில் நடக்கும் அமைச்சர்களின் விழாக்களையும் எம்.எல்.ஏக்கள் பலரும் புறக்கணிக்கின்றனர். கடலூரில் நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான ஆய்வுப் பணிகளை பார்வையிட அமைச்சர்கள் சென்றபோது, சில எம்.எல்.ஏக்கள் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி
" தொகுதிகளில் நடக்கும் அரசுப் பணிகளுக்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏ சுட்டிக் காட்டும் நபருக்குத்தான் டெண்டர் வழங்கப்படுகிறது. அதிகாரிகள் மாற்றம், அரசு வேலை உள்பட அனைத்திலும் எம்.எல்.ஏக்களின் கோரிக்கைளை நிறைவேற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்தப் பணத்தை எல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாக பார்க்கவில்லை.
எம்எல்ஏக்கள் பணத்தாசை
இன்னும் பெரிய அளவுக்கு ஆசைப்படுகிறார்கள். கூவத்தூரைவிட இரண்டு மடங்கு ஆசையில் இருக்கிறார்கள் எம்.எல்.ஏக்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தத் தயாராகி வருகிறது தினகரன்-திவாகரன் கோஷ்டி" என விவரித்த கொங்கு அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், " சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, பிப்ரவரி 18-ம் தேதி முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி. ஆரம்பத்தில் தினகரன் சொல்வதைக் கேட்டுத்தான் அவர் செயல்பட்டார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
ஆர்.கே.நகர் தேர்தலில் விளையாண்ட பணத்தால், எடப்பாடி பழனிசாமியும் சிக்கிக் கொண்டார். இந்த வழக்கில் தினகரன் உள்ளே சென்ற பிறகு, எடப்பாடிக்கு ஏறுமுகம்தான். வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் தவிர்த்து, அனைவரும் எடப்பாடி பக்கம் வந்துவிட்டனர்.
மன்னார்குடி டீம்
இந்த எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் பணத்தாசை காட்டும் முடிவுக்கு வந்துவிட்டது மன்னார்குடி கோஷ்டி. இதற்கென தனியாக டீம் போட்டு எம்.எல்.ஏக்களிடம் பேசி வருகின்றனர். மாவட்ட அமைச்சர் தயவில் பதவிக்கு வந்த எம்.எல்.ஏக்கள் பலரும், இப்போது போனையே எடுப்பதில்லை. அந்தளவுக்கு மன்னார்குடி டீம் அவர்களை மயக்கி வைத்திருக்கிறது.