அதிகாரி தற்கொலை: அமைச்சர் பதவியில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியை டிஸ்மிஸ் செய்க: இளங்கோவன்
சென்னை: நெல்லை வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு காரணமான அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி கடந்த 20-2-2015 அன்று தச்சநல்லூரில் ஓடும் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நேர்மைக்கும், கடமைக்கும் பெயர் பெற்றவரான முத்துகுமாரசாமியின் தற்கொலை முடிவில் தமிழக வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சம்பந்தப்பட்டிருக்கிறார் என்கிற தகவலை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தேன். இதை உறுதிப்படுத்துகிற வகையில் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டிருக்கிறார்.
ஒரு அரசு அதிகாரி தற்கொலை செய்வதற்கு காரணமான அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது. தற்கொலையில் பிரதான பங்கு வகித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலக்கப்பட வேண்டும்.
இவ்வாறு இளங்கோவன் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.