தமிழக சட்டசபை சபாநாயகர் வேட்பாளராக தனபால் அறிவிப்பு: அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் நியமனம் !
சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு அதிமுக சார்பில் தனபாலும், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாட்சி ஜெயராமனும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் அவை முன்னவராக நிதியமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 3ம் தேதி சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் முதல்ருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சபாநாயகர் வேட்பாளராக ப. தனபால் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை சபாநாயகர் வேட்பாளராக பொள்ளாச்சி, ஜெயராமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் முன்னவராக ஓ. பன்னீர் செல்வமும் சட்டப்பேரவை கொறடாவாக அரியலூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2012 - 2016 சட்டமன்றத்தில் சபாநாயகராக பதவி வகித்தவர் தனபால். அதேபோல் பொள்ளாட்சி ஜெயராமனும் 2012 -2016 சட்டமன்றத்தில் துணை சபாநாயகராக பதவி வகித்தவர்.