அதிமுகவில் இனி பொதுச்செயலர் பதவியே இல்லை? எடப்பாடி தலைமையிலான கூட்டத்தில் ஆலோசனை
அதிமுகவில் இனி பொதுச்செயலர் பதவியே யாருக்கும் இல்லை; அதற்கு இணையான பதவியை உருவாக்குவது தொடர்பாக எடப்பாடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுகவில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலர் பதவியை வேறு யாருக்கும் கொடுக்காமல் அதற்கு இணையான பதவியை உருவாக்குவது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் தினகரனின் கை ஓங்கி வரும் நிலையில் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக இருதரப்பும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.
எடப்பாடி ஆலோசனை
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணியுடன் இணணவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
புதிய பதவி
அப்போது, மறைந்த ஜெயலலிதா வகித்த பொதுச்செயலர் பதவியை வேறு யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்றும் அதற்கு இணையான ஒரு பதவியை உருவாக்கலாம் எனவும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்படி உருவாக்கப்படும் புதிய பதவியை ஓபிஎஸ்-க்கு தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சசி, தினகரனுக்கு செக்
பொதுச்செயலர் பதவியே இல்லை என்கிற முடிவின் மூலம் சசிகலா, தினகரன் இருவரையும் அதிமுகவில் இருந்து வெளியேற்றிவிடலாம் என்பது எடப்பாடி தரப்பின் வியூகம். இந்த நிலைப்பாட்டை ஓபிஎஸ் தரப்பும் ஆதரிக்க வாய்ப்புகள் இருக்கிறது.
சசி குடும்ப சகாப்தம் முடிவு
இதனால் தினகரனின் நியமனங்கள் எதுவும் செல்லாத நிலை உருவாகும். அத்துடன் அதிமுகவில் சசிகலா குடும்பத்தின் சகாப்தம் முடிவுக்கு வரும் என அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.