மாறி மாறி பேசும் எடப்பாடியார், ஓபிஎஸ்.. அணிகள் எப்படி இணையும்?
அதிமுக அணிகள் விரைவில் இணையும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வரும் நிலையில் அதிகாரப்பூர்வமாக எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் ஓபிஎஸ்.
சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி அணி கூறியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அம்மா அணி ( எடப்பாடி) அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை கடந்த 5 மாதங்களுக்கு மேலாகவே நடந்து வருகிறது.
இருஅணிகளைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி பேசிய பேச்சுக்கள்தான் இணைப்புக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. தினகரன் கொடுத்த கெடுவுக்குள் அணிகள் இணையவில்லை. இதனையடுத்து டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
பாஜகவின் கெடு
இதனிடையே அணிகளை இணைக்க மத்தியில் ஆளும் பாஜக தலைமை கெடு விதித்துள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அணிகளை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாம். இதனிடையே டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்சும் நேற்று முகாமிட்டனர். அப்போது இணைப்பு குறித்து பேசலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
விரைவில் இணையும்
அணிகள் இணைப்பு பற்றி எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டால் விரைவில் இணையும் என்று கூறியுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி எதுவும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று கூறியுள்ளார் ஒபிஎஸ். முதலில் மக்கள் விரும்பும் மாற்றம் நடக்கும் என்று கூறியவர் டெல்லியில் இப்போது மாற்றி பேசியுள்ளார்.
2 நிபந்தனைகள்
எங்களின் ஒரு நிபந்தனையை மட்டுமே தீர்மானமாக போட்டுள்ளனர், சசிகலா நீக்கம், ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று உறுதியாக கூறி வருகிறது ஓபிஎஸ் அணி.
எடப்பாடி அணி தீர்மானம்
இணைப்பிற்கான முதற்கட்டமாகவே டிடிவி தினகரனை துணைப்பொதுச்செயலாளர் பதவியில் நியமித்தது செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது ஒபிஎஸ் அணிக்கே சாதமாக அமைந்துள்ளது.
ஓபிஎஸ் அணியின் நகர்வு
தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். அணி சார்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிமுக சட்டவிதிகளுக்குட்பட்டு சசிகலா, கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்படவில்லை என ஏற்கனவே, தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்த அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி, இன்று அதற்கான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. அதில், தாங்களே உண்மையான அதிமுக என பன்னீர் அணி கூறியுள்ளது.
சுட்டிக்காட்டிய ஓபிஎஸ்
அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று நேற்று தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில், அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஓ.பி.எஸ். தரப்பு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், எடப்பாடி அணியினர் தினகரன் நியமனம் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளதையும் ஓ.பி.எஸ். அணி சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரே கல்லில் 2 மாங்காய்
ஏற்கனவே, அதிமுக என்ற பெயரைப் பயன்படுத்தினால், அமைச்சர்கள் பதவியை இழக்க வேண்டிவரும் என்று தினகரன் கூறியிருந்த சூழலில், அதனை சுட்டிக்காட்டியுள்ள ஓ.பி.எஸ். தரப்பு, ஒரே கல்லில் இரட்டை மாங்காயை அடிக்க முயன்று வருகிறது.
குழம்பிய குட்டையில் மீன்
அதிமுகவில் நிலவும் குழப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தியுள்ள ஓபிஎஸ் தரப்பு, தங்களையே உண்மையான அதிமுகவாக கருதி, இரட்டை இலைச்சின்னத்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் ஆணைத்திடம் முறையிட்டுள்ளது.
எப்போது இணையும்
இதே நேரத்தில் டிடிவி தினகரன் அணியோ இதுநாள் வரை ஓபிஎஸ் அணியினரை திட்டி வந்தனர். இப்போது எடப்பாடி பழனிச்சாமி அணி, அமைச்சர்கள் ஆகியோரையும் சேர்த்து வசைபாடுகின்றனர். இதே நிலை நீடித்தால் அணிகள் இணைய வாய்ப்பு குறைவு என்றே கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.