அங்கிட்டு ஒரு பேச்சு... இங்கிட்டு ஒரு பேச்சு.... தம்பிதுரை மீது அதிமுக எம்எல்ஏ சீற்றம்
லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சுயலாபத்துக்காக செயல்படுவதாக காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன் கடுமையாக விமர்சித்தார்.
சென்னை: தமிழகத்தில் ஒரு பேச்சு, டெல்லியில் ஒரு பேச்சு, இதுதான் லோக்சபா சபாநாயகர் தம்பிதுரை செய்து வருகிறார் என்று காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ முருகுமாறன் விமர்சித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும் என்று தம்பிதுரை அறிவித்த நிலையில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென அறிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த தம்பிதுரை சசிகலாவின் அறிவுரைப்படி தான் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதாக கூறினார். ஆனால் டிடிவி தினகரன் தனியாக விடுத்த ஆதரவு அறிக்கையில் எடப்பாடி தன்னிச்சையாக அறிவித்தது அம்பலமானது.
இதுகுறித்து எம்.பி. அருண்மொழித்தேவன், அரக்கோணம் எம்பி திருத்தணி கோ.அரி, காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன் ஆகிய மூவரும் இணைந்து தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது எம்எல்ஏ முருகுமாறன் கூறுகையில், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறியதே தம்பிதுரைதான். தமிழகத்தில் ஒரு கருத்தையும், டெல்லியில் ஒரு கருத்தையும் கூறி வருகிறார்.
கட்சியையும் , ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய அவர் தற்போது தன்னுடைய சுயலாபத்துக்காக அவர் செயல்பட்டு வருகிறார். அதிமுகவையும், ஆட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு எம்பி-க்கள், எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளது.
இதனால்தான் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்கும்படி அவரை தொடர்பு கொண்டு பிரதமர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவர் நிர்வாகிகளின் கூட்டத்தை கூட்டி பாஜகவுக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்தார் என்றார் முருகுமாறன்.