சென்னை அருகே கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள்!
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சொகுசு பேருந்தில் அழைத்து செல்லப்பட்ட அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று காலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் காலதாமதம் செய்வதாகவும், குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
கூட்டம் முடிந்த பிறகு 3 சொகுசுப் பேருந்துகளில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் கிரின்வேல்ஸ் சாலையில் உள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து சொகுசு பேருந்து கிழக்கு கடற்கரை நோக்கி பயணித்தது.
சுமார் 3 மணிநேர பயணத்திற்கு பின்னர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் சென்றடைந்தது. அங்குள்ள கோல்டன் பே என்ற ரிசார்ட்டில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பதவி பிரமாணம் செய்து வைப்பது குறித்து ஆளுநர் முடிவு எடுக்கும் வரை எம்.எல்.ஏ.க்கள் இங்கேயேதான் இருப்பர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். சசிகலாவின் முழுகட்டுப்பாட்டில் தான் 129 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். யாரும் வெளியேறாத வகையில் பலத்த பாதுகாப்புடன் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடும் கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்களின் செல்போன்களும் கடுமையான கண்காணிப்பில் உள்ளது.