கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் தமிழக மீனவர்களுக்குப் பாதிப்பு - தம்பித்துரை
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி பிரதமர் அலுவலகத்தில் அதிமுக எம்.பிக்கள் மனு அளித்துள்ளனர்.
டெல்லி: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக எம்.பிக்கள் பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
ராமேஸ்வரம் தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு 8 மணி அளவில் இந்திய-இலங்கை கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கடுமையாகத் தாக்கினர். இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவர் படுகாயம் அடைந்தார்.
இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்தைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண கோரிக்கை வைத்து பிரதமர் அலுவலகத்தில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மனு அளித்துள்ளார். பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் நிர்பேந்தர் மிஸ்ராவிடம் இந்த மனுஅளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை கூறியதாவது: இந்திய அரசு தலையிட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். ஒப்பந்தத்தை மீறி இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் தமிழக மீனவர்களுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை மீனவர்களை சுடக் கூடாது.
கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு. இதை மீறி இலங்கை அரசு நடக்கக் கூடாது. இதை பலமுறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். திமுக செய்த சதியால் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் தமிழக மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.