நாங்களும் சந்திப்போம்ல.. ஆளுநரை இன்று காலை சந்திக்கிறார் அதிமுக எம்பி தம்பிதுரை
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த நிலையில், இன்று மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்.பியுமான தம்பிதுரை சந்திக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னையில் இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று மாலை நேரில் சந்தித்தார். அப்போது கூவத்தூர் பண பேர வீடியோ தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியதுடன், அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழக சட்டசபையில் குதிரை பேரத்தின் அடிப்படையில் தான் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார்கள். அப்போதே ஆளுநரிடம் இதுபற்றி புகார் கொடுத்தோம். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், பேரத்தில்தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை ஆங்கிலத் தொலைக்காட்சி உறுதிப்படுத்தி உள்ளது. எம்.எல்.ஏ. சரவணன் தனது பேட்டியில் தெளிவாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து மூன்று நட்களாக நேரமில்லா நேரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சி சார்பில் பிரச்சினை எழுப்பினோம். ஆனால், அதற்கு சபாநாயகர் சம்மதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இன்று ஆளுநரை சந்தித்து நடந்த சம்பவத்தை விரிவாக கூறினோம்.
எடப்பாடி பழனிச்சாமி அரசு ஆளும் தகுதியை இழந்து விட்டது. எனவே, அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்று உறுதி அளித்திருக்கிறார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று காலை 11 மணிக்கு ஆளுநரை அதிமுக எம்.பி.தம்பிதுரை சந்திக்க உள்ளார். எதிர்கட்சியினரும், ஆளும் கட்சியினரும் அடுத்தடுத்து ஆளுநரை சந்திப்பது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. எது எப்படியோ முடிவு ஆளுநர் கையில் தான் உள்ளது.