ஏன் இந்த குழப்பம்.. அரைக் கம்பத்திற்கு இறக்கிய கட்சி கொடியை மீண்டும் ஏற்றிய அதிமுக தலைமை அலுவலகம்!
ஜெயலலிதா உடல்நிலை குறித்த மாறுபட்ட தகவல்களால் அதிமுக கட்சி கொடி இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது.
சென்னை: ஜெயலலிதா உடல் நிலை குறித்து வெளியான தவறான தகவலால் அதிமுக தலைமை அலுவலகத்தில் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கட்சி கொடி மீண்டும் மேலே ஏற்றி பறக்கவிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கவலைக்கிடம் என செய்திகள் வெளியான நிலையில், மாலையில் சில டிவி மீடியாக்கள், ஜெயலலிதா உடல்நிலை குறித்து மோசமான வதந்தியை கிளப்பிவிட்டன. இந்த செய்தியை வெளியிடலாமா வேண்டாமா என தெரியாமல் பிற ஊடகங்கள் திணறிய நேரத்தில், அதிமுக கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் கட்சி கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
எனவே பிற ஊடகங்களும், வதந்தி செய்தியை உண்மை என நம்பி வெளியிட்டன. இந்த நிலையில், டிவி சேனல் செய்தியை மறுத்து அப்பல்லோ நிர்வாகம் டிவிட்டும், அறிக்கையும் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக கொடி முழுக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
#WATCH: Party flag hoisted again at AIADMK HQs in Chennai #jayalalithaa pic.twitter.com/8dAqqTwjSc
— ANI (@ANI_news) December 5, 2016
ஊடகங்களில் ஏற்பட்ட செய்தி குழப்பத்திற்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த குழறுபடிகள் முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை. ஏனெனில் ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை அலுவலகத்திலுள்ள கொடியை இறக்கி ஏற்றுவது என்பது விளையாட்டான விஷயமில்லை.