ஜெயலலிதா சைகையில்தான் பேசிக்கொள்கிறாரா.. ஷாக்காகும் சி.ஆர்.சரஸ்வதி
தமிழக முதல்வர் நலம் பெற்று அனைவரிடமும் சகஜமாக பேசி வருவதாகவும், சைகை மொழியில் பேசுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சைகை மொழியில்தான் பேசி வருவதாக வெளியான தகவலை அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி மறுத்துள்ளார்.
கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது உடல் நிலையில் சமீபகாலமாக நல்ல முன்னேற்றம் இருப்பதாக அப்பல்லோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து, ஜெயலலிதா தன்னுடன் உள்ளோரிடம் உரையாடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த உரையாடல்கள் சைகை மொழியில் இருப்பதாகவும், வாய் திறந்து பேசவில்லை எனவும் சில தகவல்கள் பரவின.
இதுகுறித்து சரஸ்வதி கூறுகையில், முதல்வர் வேகமாக நலம் பெற்று வருகிறார். விரைவிலேயே அவர் வீடு திரும்புவார். அப்பல்லோ டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்யும் தேதியை முடிவு செய்ய வேண்டியது மட்டுமே பாக்கியுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைகளும், பூஜைகளும், எய்ம்ஸ், சிங்கப்பூர், அப்பல்லோ மருத்துவர்களின் அருமையான சிகிச்சையும், ஜெயலலிதாவை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப செய்துள்ளது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெயலலிதா இயல்பாக பேசிவருகிறார். சைகை மொழியில் அவர் பேசுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. இவ்வாறு சரஸ்வதி தெரிவித்தார்.