அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி ரத்து? சசிகலா அதிரடி நீக்கம்?
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கும் முடிவு நாளைய கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக பொதுச்செயலர் பதவியை ரத்து செய்துவிட்டு சசிகலாவை நீக்கும் முடிவை நாளைய நிர்வாகிகள் கூட்டம் மேற்கொள்ளக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
அதிமுகவின் இரு அணிகளும் வெள்ளிக்கிழமையன்று இணைந்து விடும் என கூறப்பட்டது. ஆனால் இணைப்பு இழுபறியானது.
நாளை கூட்டம்
இந்த நிலையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அதிமுகவின் சட்டதிட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வழிகாட்டுதல் குழு
அதிமுகவில் பொதுச்செயலர் என்ற பதவியை ரத்து செய்துவிட்டு வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைக்கும் வகையில் இத்திருத்தம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த வழிகாட்டுதல் குழுவுக்கு ஓபிஎஸ் தலைவராக இருக்கலாம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
சசிகலா நீக்கம்
பொதுச்செயலர் பதவியை ரத்து செய்வதுடன் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கும் முடிவையும் மேற்கொள்ளலாம் என தெரிகிறது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து அதிமுகவின் இரு அணிகளும் இணையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இணைப்பு?
இதைத்தான் வேலூரில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று சுட்டிக்காட்டியதாக தெரிகிறது. அத்துடன் ஓபிஎஸ் அணி தலைவர்களை திருப்திபடுத்தும் வகையில் கட்சி பதவிகள் வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம். இதனால் அதிமுக அணிகள் இணைப்பு சாத்தியமாகும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.