இரட்டை இலை எங்களுக்கே... தேர்தல் ஆணையத்தில் தீபா அணி புது மனு
எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தீபா அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக, இரட்டை இலைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி தினகரன் அணி முட்டி மோதி வரும் நிலையில் தீபா அணி தேர்தல் ஆணையத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலையை தங்களுக்கே தரவேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
பிப்ரவரி மாதம் அதிமுக அணி பிளவுபட்டது. சசிகலா, ஓபிஎஸ் அணி என பிரிந்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இரட்டை இலை சின்னத்தை இருவருமே கேட்கவே, தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் முடக்கியுள்ளது.
மூன்று அணிகள் மோதல்
முடக்கப்பட்ட கட்சி, சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக இரு அணிகளும் இணைவதற்கான முயற்சிகளும் தீவிரப்படுத்தபட்டுள்ளன. இதனிடையே சசிகலா அணி தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி, டிடிவி தினகரன் அணி என பிளவுபட்டுள்ளது.
தீபா அணி மனு
ஒரு கட்சி, சின்னத்திற்கு மூன்று அணிகள் முட்டி மோதி வரும் நிலையில் தீபா அணியினரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி போட்டு வருகிறார்கள். இது தொடர்பாக அந்த அணியின் தலைமை செய்தி தொடர்பாளர் வக்கீல் பசும்பொன்பாண்டியன், கடலூர் வெங்கட் ஆகியோர் டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.
போலி ஆவணங்கள்
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் அணியினர் போலியாக ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். நாங்கள் சமர்ப்பித்துள்ள ஆவணங்களே உண்மையானவை. எனவே எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபா அணி கோரிக்கை
தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்றும், அதிமுக பொதுச் செயலாளர் என்றும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்பது தீபா அணியினரின் கோரிக்கை . 2013 ஆம் ஆண்டு அம்மா அவர்கள் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும்போது அதிமுகவில் ஒரு கோடியே 65 லட்சம் அடிப்படை உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள்.
வெளிப்படையான தேர்தல்
எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரங்களில் பல முரண்பாடுகள் இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் அதிமுகவின் புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வெளிப்படையான தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும்.
அதிமுக உறுப்பினர்கள் தேர்வு
ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் இந்த தேர்தல் நடக்க வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் யார் என்று கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் வழி செய்ய வேண்டும் என்றும் தீபா அணியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.