முதல்வர் ஜெயலலிதா குணமடைய கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு
சென்னை : தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா காய்ச்சல், நீர்சத்து குறைபாடு மற்றும் அஜீரண கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இப்போது நலமாக இருக்கிறார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் உடல்நலக்குறைவு பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மயிலாப்பூரில் முண்டக்கன்னியம்மன், கோலவிழியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கும்பாகோணத்தில் பாதாள காளியம்மன் கோவிலில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
கொடுங்கையூரில் உள்ள அம்மன் கோயிலில் அ.தி.மு.க., தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார், தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தமிழத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் ஒரு திடீர் உத்தரவு பிரப்பித்துள்ளார். 'இன்று மாலை 4 மணிக்கு கோயில்களில் நடை திறக்கப்பட்டதும் முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும். இதை அந்தந்த கோயில் நிர்வாக அலுவலர்கள் கவனித்து கொள்ள வேண்டும்' எனவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.