திருச்சி-சென்னை இடையே புதிய விமான சேவை துவக்கம்
திருச்சி - சென்னை இடையே புதிய விமானச் சேவையை ஏர் கானிவல் என்ற நிறுவனம் துவக்கியுள்ளது.
திருச்சி: திருச்சி - சென்னை இடையே கூடுதல் விமான சேவை தேவை என்று பயணிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து புதிய விமானச் சேவையை ஏர்கானிவல் என்ற நிறுவனம் நேற்று முதல் துவக்கியுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு விமான சேவையாக திருச்சி - சென்னை இடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தினமும் 3 விமானத்தை இயக்கி வருகிறது.
இந்நிலையில், திருச்சி - சென்னை இடையே கூடுதல் விமான சேவை தேவை என்று பயணிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து சென்னைக்கு புதிதாக ஏர் கார்னிவல் என்ற நிறுவனம் விமான சேவையை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விமான சேவைக்காக மத்திய சிவில் மற்றும் விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதியளித்தை தொடர்ந்து திங்கள்கிழமை முதல் தனது விமான சேவையினை ஏர்கார்னிவல் நிறுவனம் துவக்கியது. அதன்படி காலை 9.20க்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து 9.40 க்கு புறப்பட்டு செல்லும்.
ஏற்கனவே சென்னைக்கு 3 விமான சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 4வது உள்நாட்டு விமான போக்குவரத்தை துவக்கி இருப்பது, பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே திருச்சி விமானநிலையத்தில் 6 விமான நிறுவனங்கள் போக்குவரத்தை நடத்தி வரும் நிலையில் தற்போது 7வது நிறுவனம் தனது சேவையை துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.