கொஞ்சம் நம்புங்க பாஸ்... நம்ம சென்னையில் தூய காற்று விற்பனைக்கு !
சென்னை: உணவில்லாமல் சிலநாட்கள் வாழமுடியும், தண்ணீர் இல்லாமலும் வாழமுடியும், ஆனால் சுவாசிக்காமல் உங்களால் வாழ முடியுமா? என்ற விளம்பரத்துடன் சென்னை நகரில் சிலிண்டரில் அடைக்கப்பட்ட காற்று தற்போது விற்பனைக்கு வந்துவிட்டது.
உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சீனாவில் காற்று மாசு அடைந்து வரும் சூழலில் கனடா நாட்டு நிறுவனம் ஒன்று தூய்மையான மலைக் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கின்றது. கனடா நாட்டில் உள்ள பான்ஃப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது தனியார் நிறுவனம் ஒன்று.
இந்த நிலையில் தற்போது இந்தியாவின் பெருநகரங்களும் காற்று மாசுபாட்டை சந்தித்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் காற்று மாசுபாட்டை குறைக்க ஒன்றைப் படை, இரட்டைப் படை என்ற முறையில் வாகனங்களை இயக்க வேண்டும் என்று கடந்த சில வாரங்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை சோதனை ஓட்டமாகவும் இயக்கி பார்த்தது மாநில அரசு. இதனிடையே ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மக்களுக்கு விற்கும் வியாபாரத்தை நிறுவனம் ஒன்று சென்னையில் துவங்கியுள்ளது.
மருத்துவ சான்றிதழ் எதுவும் தேவைப்படாத இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்று அந்த நிறுவனத்தின் விற்பனை முகவர்கள் கூறுவது ஒரு வேடிக்கையாக இருந்த போதிலும் விளையாட்டு வீரர்களுக்கு இந்த சுவாசக் காற்று சிலிண்டர்கள் உதவியாக இருக்கும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், காற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு சென்னையில் சுற்றுச்சூழல் அவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதா என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அரசு அனுமதியில்லாமல் இப்படிச் சிலின்டர்களை விற்பனை செய்யமுடியுமா எனச் சிலர் கேள்வியெழுப்பியதுடன் இதற்கு அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமெனவும் சிலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
ஆனால் மருத்துவரின் ஆலோசனையுடன் சரியான அளவில் இதனை எடுத்துக் கொண்டால் நல்லது. மூச்சு திணறல் உள்ளவர்கள், மலையேற்றம், உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் பயனுள்ளதாக இருக்கும். நாள் முழுவதும் துாசி காற்றில் வெளியில் அலைந்து வருவோர் மருத்துவர் ஆலோசனையின் படி ஓரிரு முறை இதனை சுவாசித்தால் புத்துணர்ச்சி பெற வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இயற்கையை நாம் அழித்தால் இப்படித்தான் ஒவ்வொன்றாக நாம் காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு தள்ளப்படுவோம் என்பதே இதிலிருந்து தெரிகிறது.