4ஜி விளம்பரத்தை வெளியிட ஏர்டெல்லுக்கு 'இந்திய விளம்பர தர கவுன்சில்' தடை!
சென்னை: ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுவரும் 4ஜி சேவை பற்றிய விளம்பரங்களை வரும் 7ம் தேதிக்கு பிறகு வெளியிட கூடாது என்று இந்திய விளம்பர தர கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம், கடந்த ஆகஸ்டு மாதம் இந்தியா முழுவதும் 296 நகரங்கள் மற்றும் 14 முக்கிய சர்க்கிள்களில் 4ஜி இணையதள சேவையை துவங்கியது. இதையடுத்து ரிலையன்ஸ், ஐடியா, வோடபோன் போன்ற மேலும் பல தொலைபேசி நிறுவனங்களும் 4ஜி சேவையை அளிக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், 4ஜி சேவை பற்றி ஏர்டெல் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சைக்குள்ளாகியது. ஏர்டெல் 4ஜி சேவையை மிஞ்சும் அதிவேக நெட்வொர்க் இருப்பதாக யாராவது நிரூபித்தால் வாழ்நாள் முழுவதும் அவருக்கான செல்போன் பில்லை கட்டுவதாக சவால் விடும் வகையில் ஏர்டெல் விளம்பரம் செய்திருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவி்த்துள்ள இந்திய விளம்பர தர கவுன்சில் (ஏ.எஸ்.சி.ஐ), பார்தி ஏர்டெல் நிறுவனம் வாழ்நாள் முழுவதும் இலவச மொபைல் இணைப்பை வழங்குவதாக வாடிக்கையாளர்களை திசை திருப்பும் வகையில் விளம்பரம் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அந்த விளம்பரத்தை வரும் 7ம் தேதிக்குள் தொலைக்காட்சி வழியாகவோ அல்லது அச்சு வழியாகவோ வெளியிடுவதை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது.