வாக்குப்பதிவு துவங்கியதும் முதல் ஆளாக வாக்களித்த அஜீத், ரஜினி, ஷாலினி
சென்னை: நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் முதல் ஆளாக வாக்களித்துள்ளார். இதே போன்று ரஜினிகாந்தும் காலையிலேயே வாக்களித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. வாக்குப்பதிவு துவங்க சில நிமிடங்கள் இருக்கையிலேயே நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றுக்கு வந்தார்.
வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று அவர்கள் இருவரும் வாக்களித்தனர். முதலில் ஷாலினியும், அடுத்ததாக அஜீத்தும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு துவங்கியதும் முதல்
ஆளாக வாக்களித்துள்ள பிரபலம் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்பொழுது தேர்தல் நடந்தாலும் அஜீத், தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களிப்பது வழக்கம். இந்த முறையும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார் அஜீத்.
அஜீத் வாக்களித்துவிட்டு மை வைக்கப்பட்ட விரலை மீடியாக்களுக்கு காண்பித்துவிட்டு கிளம்பினார். இதே போன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் காலையிலேயே வாக்களித்துள்ளார். தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார் ரஜினி.