அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தோஷம்... வாட்ஸ் அப்பில் வேகமாக பரவும் தகவல்
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தோஷம் ஏற்படும் என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.
சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் இந்த நாளில் தங்கம் வாங்கினால் தோஷம் ஏற்படும் என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.
அட்சய திருதியை அன்று அவரவர் வசதிகேற்ப பொருள்களை வாங்கினால் அவை சேரும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆடை, அணிகலன்கள், பொருள்கள், வீட்டு உபயோக பொருள்கள் என எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற தகவல் பரவலாக பரவி வருகிறது.
இதற்கு 15 நாள்களுக்கு முன்னரே நகைக் கடை வியாபாரிகள் கவர்ச்சியான விளம்பரங்களை செய்து வந்தன. அதாவது தங்கத்தின் எடைக்கு வெள்ளி இலவசம், சவரனுக்கு இத்தனை ரூபாய் தள்ளுபடி, நகைகளை தேர்வு செய்து அட்வான்ஸ் தொகையை கட்டிவிட்டால் அட்சய திருதியை அன்று தங்கத்தின் விலை ஏறினாலும் மக்கள் புக் செய்த நாளன்று விற்கப்பட்ட விலைக்கே தங்கம் வழங்குவது உள்ளிட்ட விளம்பரங்களை அளித்து வருகின்றன.
அட்சய திருதியை அன்று ஒரு குண்டுமணி பவுனாவது வாங்கினால் வீட்டில் சொர்ண மழை பெய்யும் என்ற மக்கள் நம்புவதால் கடந்த அமாவாசை முதல் நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தோஷம் ஏற்படும் என்று ஒரு வைதீகர் கூறும் தகவல் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அதில் அவர் குறிப்பிடுகையில், அட்சய திருதியை நாள் என்பது முகூர்த்த நாள் அல்ல. இந்த நாள் புண்ணிய காலம் என்று திதி நிர்ணய காண்டம், வர்ணாஸ்ரமம் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளது.
வைதீக தர்மத்தின்படி அட்சய திருதியை அன்று பித்ரு காரியம் செய்வதும் , அன்னதானம் செய்வது, விஷ்ணு சம்பந்தமான ஜபங்களை செய்வது, ஆடை தானங்கள் செய்வதும்தான் சிறந்தது. காசு கொடுத்து வாங்கும் சொர்ணம் வளராது. அட்சயம் என்றால் வளரும் என்ற பொருளை கொண்டு தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இனியாவது மக்கள் விழித்துக் கொள்ளுங்கள் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.