அழகிரி பிறந்தநாள்: சாரட் வண்டியில் ஊர்வலம்... மதுரையை கலக்கிய ஆதரவாளர்கள்
மதுரை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் வாகன அணிவகுப்பு, சாரட் வண்டி என மதுரையை கலகலக்க வைத்துள்ளனர்.
தி.மு.க.வில் நீக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று தனது 64-வது பிறந்தநாளை மதுரை சத்தியசாய் நகரில் உள்ள தனது வீட்டில் கொண்டாடினார்.
காலை 9 மணிக்கு கேக் வெட்டிய அழகிரி, தனது மனைவி காந்தி அழகிரி, மகன் துரைதயாநிதி மருமகள் மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் துணை மேயர் மன்னன், மாநகராட்சி கவுன்சிலர்கள் எல்.எல்.ராஜ், முபாரக் மந்திரி ஆகியோருக்கு கேக் ஊட்டினார். அப்போது அவர்கள் அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஆதரவாளர்கள் முன்னிலையில் பிறந்தநாளை கொண்டாட ராஜா முத்தையா மன்றத்திற்கு வீட்டில் இருந்து காரில் அழகிரி புறப்பட்டார்.
பிறந்தநாள் ஊர்வலம்
அழகிரியின் காரின் பின்னால் 20 கார்கள், இருசக்கர வாகனங்கள் புடைசூழ சென்றது. அப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களின் வாகனங்களை வேறு பாதையில் காவல்துறையினர் திருப்பி விட்டனர்.
அண்ணா சிலைக்கு மாலை
நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அழகிரி, பின்னர் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
சாரட் வண்டியில்
அங்கே ஆதரவாளர்கள் தயாராக வைத்திருந்த சாரட் வண்டியில் ஏறி அழகிரி புறப்பட்டார். சிம்மக்கல் பகுதியில் 130 கிலோ எடை கொண்ட ராட்சத மாலை கிரைன் மூலம் அவருக்கு அணிவிக்கப்பட்டது.
பால்குடம்
அழகிரியின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் பால்குடம் எடுத்து வந்தனர். பெண்கள் முளைப்பாறி எடுத்துவந்தனர். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
64 கிலோ கேக்
ராஜா முத்தையா மன்றம் சென்ற அழகிரிக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் 64 கிலோ கேக்கை அழகிரி வெட்டினார். அப்போது ஆதரவாளர்கள் அழகிரி வாழ்க வாழ்க சென்று முழக்கமிட்டனர்.
நலத்திட்ட உதவிகள்
ராஜா முத்தையா மன்றத்தில் நடக்கும் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கி வருகின்றார். அழகிரியின் பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு கறிவிருந்து பிரியாணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரை இன்று ஸ்தம்பித்தது.