எங்களுக்கு ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்கனும், அவ்வளவுதான்... அலங்காநல்லூர் மக்கள் ஒரே போடு!
நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அதை மட்டுமே ஏற்போம் என்று அலங்காநல்லூர் மக்கள் கூறி விட்டனர்.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் என்பதையெல்லாம் ஏற்க நாங்கள் தயாராக இல்லை. எங்களுக்கு ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்க வேண்டும். எப்போதும் போல நடக்க வேண்டும். அதுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யுங்க. வேறு எது செய்தாலும் நாங்க ஏற்க மாட்டோம் என்று அலங்காநல்லூர் மக்கள் ஒரேயடியாக கூறி விட்டனர்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவசரச் சட்டம் கொண்டு வரப் போவதாக கூறினார். இதையடுத்து போராட்டம் வென்ற ரீதியில் சிலர் செய்திகளை பரப்ப ஆரம்பித்து விட்டனர். ஆனால் உண்மையில் போராட்டக்களத்தில் உள்ள இளைய தலைமுறையினரும், அலங்காநல்லூர் கிராம மக்களும் இதை ஏற்கவில்லை, முழுமையாக நிரா்கரித்துள்ளனர் என்பதே உண்மை நிலவரமாக உள்ளது.
இதுகுறித்து போராட்டக்களத்தில் உள்ள அலங்காநல்லூர் கிராம மக்கள் கூறுகையில், அவசரச் சட்டம் என்று சொல்வதையெல்லாம் நம்ப நாங்கள் தயாராக இல்லை. தேதியை குறிக்கச் சொல்லுங்கள். ஜல்லிக்கட்டு தேதியைச் சொன்னால்தான் நாங்கள் ஏற்போம். காளைகள் தயாராக உள்ளன. மாடு பிடி வீரர்களும் தயாராக உள்ளனர். நாங்க எப்ப வேண்டும்னாலும் ஜல்லிக்கட்டு நடத்தத் தயார். அனுமதிக்கு மட்டுமே காத்திருக்கிறோம்.
அது மட்டுமல்ல, ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்க வேண்டும். வழக்கம் போல நடக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அது மட்டுமே நிர்ந்தர தீர்வாகும். அதை மட்டுமே நாங்கள் ஏற்போம் என்று அடித்துக் கூறி விட்டனர்..
இதே உணர்வு, கோரிக்கையுடன்தான் மெரீனா கடற்கரைப் போராட்டக்களத்திலும் இளைஞர்கள் ஒரே குரலில் கூறி வருகின்றனர். எனவே முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் உத்தரவாதமும், பேச்சும் போராட்டக்காளத்தில் உள்ளவர்களின் மத்தியில் எடுபடவில்லை என்பதே எதார்த்தமாகும்.