அலங்காநல்லூர் வாடி வாசல் தயார் - அவசர சட்டம் இயற்றிய உடன் ஜல்லிக்கட்டு
தமிழகத்தில் அவசரசட்டம் இயற்றிய பின்னர் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அலங்காநல்லூர் வாடிவாசல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மதுரை: வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்லமாட்டோம் என்ற முழக்கத்துடன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்காக 500 இடங்களில் லட்சக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இளைஞர்களின் ஆர்பரிக்கும் போராட்டம் மிகப்பெரிய புரட்சியாக மாறியுள்ளது. தமிழன் என்கிற இன உணர்வுதான் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கியது. ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற அலங்காநல்லூரில் கடந்த 6வது நாளாக குடும்பம் குடும்பமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும், நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது புரட்சியாளர்களின் கோரிக்கை.
ஓபிஎஸ் மோடி சந்திப்பு
புதன்கிழமை இரவு டெல்லி சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் ஜல்லிக்கட்டு போராட்டம் பெரும் புரட்சியாக மாறியது. மாணவர்களுடன் பெற்றோர்களும் பங்கேற்றனர், பாட்டி முதல் பேத்தி வரையும், தாத்தாக்கள் முதல் பேரன்கள் வரையும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
சட்ட வரைவுக்கு ஒப்புதல்
இதன்பின் சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கும் வகையில் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சகங்களின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த சட்ட வரைவுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, சட்ட துறை, உள்துறை அமைச்சகங்கள் அனைத்தும் ஒப்புதல் அளித்தன.
தயார் நிலையில் அலங்காநல்லூர்
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து இன்று சென்னை திரும்புகிறார். அவரின் ஒப்புதலுக்கு பின் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக இன்று வசர சட்டம் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், அலங்காநல்லுாரில் நாளை ஜல்லிக்கட்டு நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
வாடிவாசல் தயார்
இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அலங்காநல்லூர் வாடிவாசலை தயார் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டு தயார் செய்யப்பட்டது. மதுரை ஆட்சியர் வீரராகவராவ், அலங்காநல்லூர் வாடிவாசலை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினரிடம் ஆலோசித்தார்.
அனுமதிக்காக காத்திருக்கிறோம்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் கூறியுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி குழுவினரும் அரசு உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.
வாடிவாசலில் இருந்து துள்ளிப்பாயும் காளைகளை தழுவ மாடுபிடி வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.