முதல்வர் ஓபிஎஸ் வருகைக்கு எதிர்ப்பு... சாலையில் பள்ளம் தோண்டி திரும்பி போகச் சொல்லும் கிராம மக்கள்
அலங்காநல்லூர் வரும் முதல்வருக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக சாலையில் பள்ளம் தோண்டியும் மணல் மூட்டைகளை அவர்கள் அடுக்கி வைத்துள்ளனர்.
மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க வரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலைகளில் பள்ளம் தோண்டி மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வரும் வரை ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என அலங்காநல்லூர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று அவசரச்சட்டம் பிறப்பித்தார். இதையடுத்து அலங்காநல்லூரில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை ஜல்லிக்கட்டுக்களை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த அலங்காநல்லூர் பகுதி மக்கள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை ஆண்டுதோறும் நடத்த நிரந்தர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டும், போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என பலரும் பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். ஜல்லிக்கட்டு நடத்த அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட காளைகளையும் அவர்கள் திருப்பி அனுப்பினர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளும் வாகனங்களும் அலங்காநல்லூரில் நுழைய முடியாதபடி அலங்காநல்லூருக்கு வெளியே பொதும்பு என்னும் கிராமத்தில் சாலையில் பள்ளம் தோண்டியும், மணல் மூட்டைகளை அடுக்கியும் வைத்துள்ளனர். கிராம மக்களின் இந்தப் போராட்டத்தால் அலங்காநல்லூரில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.