அனைத்துக் கட்சி கூட்டத்தில் எல்லா கட்சிகளும் பங்கேற்க வேண்டும்: ஜவாஹிருல்லா
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்தின் எல்லா கட்சிகளும் வேறுபாடின்றி பங்கேற்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரிப் பிரச்சினையில் தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் கூட்டவிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளின் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நான் பங்குகொள்ள உள்ளேன்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே தமிழக அரசு கூட்ட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி உட்பட தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர் என அனைவரும் வலியுறுத்தியும் தமிழக அரசு அதற்கான நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. அரசின் சார்பில் கூட்டவேண்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பொறுப்புணர்வுடன் கூட்டவிருப்பது வரவேற்கத்தக்கது.
கர்நாடகாவில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் முதல்வர் சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சி வேறுபாடுகள் இன்றி அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டனர். அதேபோல் காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சியினரும் கலந்துகொள்ள வேண்டும். இக்கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.