அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வைகோ பங்கேற்றிருக்க வேண்டும்.. பி.ஆர். பாண்டியன்
காவிரி பிரச்சனை தொடர்பாக திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றிருக்க வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னை: காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டிய கூட்டத்தை வைகோ புறக்கணிக்காமல் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார். இனி தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்புவிடுத்துள்ளார்.
இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது;
காவிரி பிரச்சனை தற்போது உச்ச கட்டத்தை எட்டி இருக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரை சந்தித்து பேச வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்திற்கு ஒரு சில கட்சிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததை தவிர்த்து இருக்க வேண்டும்.
தமிழக அரசு செய்திருக்க வேண்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக நலன் கருதி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி இருக்கிறார். காவிரி பாதுகாப்பு இயக்கம் என்று வைகோ முன்பு கூட்டிய கூட்டத்தில் திமுக பங்கேற்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் கூட்டிய கூட்டத்தில் வைகோ பங்கேற்றிருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு விவசாயிகளிடத்தில் இருக்கிறது. மீண்டும் இதுதொடர்பாக நடத்தப்படும் அனைத்து கூட்டங்கள் மற்றும் போராட்டங்களில் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
மிகப் பெரிய பாதிப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. இனி விவசாயிகளை காப்பாற்ற முடியாது. மத்திய அரசு தமிழகத்திற்கு எதிரான நிலையை எடுத்திருக்கக் கூடிய நிலையில் ஒன்றுபட வேண்டியது அவசர தேவையாக இருக்கிறது. எனவே, அனைத்து கட்சிகளும் அடுத்ததாகக் கூட்டப்படும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இன்று போடப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதற்காக 4 வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழக அரசு நடத்தாவிட்டால் அடுத்த கட்டமாக அனைத்துக் கட்சிகளையும் கூட்டி தொடர் போராட்டங்களை நடத்த முடிவெடுத்துள்ளோம்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளோம். அந்தப் பயணத்தில் 5 கோடி மக்களை சந்தித்து காவிரி பிரச்சனை குறித்து எடுத்துரைக்க உள்ளோம். அதற்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. இது உரிமைக்கான போராட்டம். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து செயல்படும் போதுதான் கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கும் மத்திய அரசின் கர்நாடக சார்பு நிலைக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும் என்று பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.