புதுச்சேரியில் முழுஅடைப்பு தீவிரம்- பாதுகாப்புப் பணியில் 1000 போலீசார் குவிப்பு!
புதுச்சேரி: விவசாயிகள் நலன்களுக்காக திமுக ஒருங்கிணைத்துள்ள முழு அடைப்புப் போராட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதனால் புதுச்சேரி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து முடங்கியுள்ளது.
தமிழக விவசாயிகள் நலனுக்காக அனைத்து கட்சிகள் சார்பில் நடத்தப்படும் முழுஅடைப்புப் போராட்டம் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று காலை தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும்,தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 50 சதவிகித அளவுக்கு பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படாமல் பெருமளவில் முடங்கிப்போயுள்ளது. குபேர் அங்காடி உள்ளிட்ட அனைத்துக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் புதுவை அரசுப் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் 1000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.