விவசாயிகளுக்காக தவிர அரசியல் நோக்கத்துக்காக அனைத்து கட்சிக் கூட்டம் அல்ல.. மு.க.ஸ்டாலின்
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே அனைத்து கட்சிக் கூட்டமே தவிர அரசியல் நோக்கத்துக்கானது அல்ல என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிிவத்தார்.
வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை மத்திய அரசு கண்டு கொள்ளாததை தொடர்ந்து திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
இடதுசாரிகள், விசிக பங்கேற்பு
இந்தக் கூட்டத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளுடன் இடதுசாரிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்றன. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்துக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அரசியல் நோக்கம் அல்ல
அப்போது அவர் கூறுகையில் இந்த கூட்டம் விவசாயிகளின் பிரச்சினைகளை போக்குவதற்காக கூட்டப்பட்டதாகும். இதில் அரசியல் நோக்கம் ஏதும் இல்லை. விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளோம் என்றார்.
திருநாவுக்கரசர் அழைப்பு
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்டவை திமுக கூட்டணியில் இணைந்தால் தமிழகத்துக்கு நல்லது நடக்கும். விவசாயிகளை சந்திக்க பிரதமர் தயங்குவது ஏன்? என்றார்.
ஜி.ராமகிருஷ்ணன்
மேலும் வரும் 25-ஆம் தேதி நடைபெற வேலை நிறுத்தப் போராட்டத்தை அனைவரும் வெற்றி பெற செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்பதால் பாஜகவை அழைக்கவில்லை என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
நேரம் ஒதுக்குவாரா?
இந்தக் கூட்டம் தேர்தல் அரசியல் ஆதாயத்துக்கானது அல்ல. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பிரதமர் நேரம் ஒதுக்குவார் என்று நம்புகிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
மதுவிலக்கு வேண்டும்
தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் விவசாயிகளுக்கு ஆதரவான தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டன என்றார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
திமுக சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் வரவேற்புக்குரியன என்றும், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு போராடினால் வெற்றி நிச்சயம் என்றும் டெல்லியில் போராடும் அய்யாகண்ணு தெரிவித்தார்.