எம்ஜிஆரை சிறப்பிக்கும் ரூ.100, ரூ.5 நாணயம்: மத்திய அரசு அரசாணை
எம்ஜிஆரின் உருவம் பொறித்த 100 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடுவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடுவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், அஇஅதிமுக நிறுவனருமான எம்.ஜி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ. 100 நாணயம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு புதிய ரூ. 5 நாணயமும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரூ. 100 நாணயம் 44 மி.மீ சுற்றளவில் 50% சில்வர், 40% செம்பு, 5% நிக்கல், 5% துத்தநாகம் ஆகிய கலவையில் உருவாகின்றது. இந்த நாணயத்தில் ஒரு பக்கம் அசோகர் தூண் இடம் பெறும் அதில் சத்யமே ஜெயதே என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு என்று ஆங்கிலம் மற்றும் தேவநாகிரி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருப்பதுடன், அதைக் குறிக்கும் வகையில் 1917-2017 என்ற ஆண்டுகளும் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பக்கத்தில் எம்ஜிஆரின் உருவம் பதிக்கப்பட்டிருக்கும். 100ரூ நாணயம் 35 கிராம் அளவிற்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே ரூ. 5 நாணயம் 23 மி.மீ சுற்றளவில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.