அதிமுக கூடத்தான் இருக்கோம்... தனித்து போட்டியிட்டாலும் 12% வாக்குகளை பெறுவோம்- சரத்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் கூட, சமத்துவ மக்கள் கட்சிக்கு 12 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் உறுதியாக கூறியுள்ளார். அதே நேரத்தில் சமத்துவ மக்கள் கட்சி இன்னமும் அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது என்றும் கூறினார்.
சமத்துவ மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம், நெல்லை கே.டி.சி. நகர் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவராக சரத்குமாரும், பொதுச் செயலாளராக ஜெயப்பிரகாஷூம், பொருளாளராக சுந்தரேசனும் தேர்வு செய்யப்பட்டனர். மகளிரணித் தலைவியாக ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த கரு.நாகராஜன் உள்ளிட்ட முக்கிய மாநில நிர்வாகி கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். கட்சி விரோத நடவடிக்கைக்காக துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்எல்ஏ நீக்கப்பட்டார். வேறு கட்சி களுக்கு தாவிய நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர். இது அரசியல் வட் டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தது. கட்சிக்குள்ளும் சலசலப்பை உருவாக்கியிருந்தது.
இந்தப் பின்னணியில்தான் சென்னையில் சமக மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தை சரத்குமார் கூட்டி, `கட்சிக்கு பின்னடைவு இல்லை' என அறிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் 52 பேரும், மாநில நிர்வாகிகள் 16 பேரும் பங்கேற்று சரத்குமாருக்கான ஆதரவை உறுதி செய்திருந்தனர்.
மாஸ் காட்டிய சரத்குமார்
இந்நிலையில் சமக சிறப்பு பொதுக்குழு நெல்லை கேடிசி நகரில் ஞாயிறன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ச.ம.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு கே.டி.சி. நகர் பகுதியில் ச.ம.க. கொடி, தோரணங்கள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தன.
தாரை தப்பட்டை வரவேற்பு
ச.ம.க. தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் கூட்ட அரங்கிற்கு வந்தார். அவருக்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. திரளான நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டதால் காலை 10 மணிக்கே கூட்ட அரங்கம் நிரம்பி வழிந்தது.
சரத்குமார் - ராதிகா
பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சரத்குமார் மீண்டும் ச.ம.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பொது செயலாளராக ஜெயபிரகாஷ், பொருளாளராக சுந்தரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மகளிரணி மாநில செயலாளராக ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
பொருப்பாளர்கள் நியமனம்
மேலும் அவைத்தலைவராக செல்வராஜ், துணை தலைவராக எஸ்.வி. கணேசன், துணை பொது செயலாளர்களாக சண்முகசுந்தரம், பன்னீர்செல்வம் உள்பட பல நிர்வாகிகள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் தேர்விற்கு பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். நிர்வாகிகள் தேர்விற்கு தேர்தல் பொறுப்பாளர்களாக மணிமாறன், சண்முகசுந்தரம், பன்னீர்செல்வம் ஆகியோர்செயல்பட்டனர்.
29 தீர்மானங்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்க தலைவர் சரத்குமாருக்கு அதிகாரம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், முல்லைப்பெரியாறு, காவிரி நதி நீர் விவகாரங்களில் தமிழகத்தின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து புதிய மாவட்டத்தை உருவாக்கி அதற்கு தென்காசியை தலைநகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உட்பட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக வெற்றியில் ச.ம.க
கூட்டத்தில் பேசிய சரத்குமார், ச.ம.க. கட்சி எந்த கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை, கட்சி என்னிடம் வழங்கியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியில், ச.ம.க.வின் பங்கும் உள்ளது.
தனித்து போட்டி
விஜயகாந்த், சகாயம் போன்றோரை முதல்வராக பலர் அறிவிக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துவரும் நிலையில், தனித்துப்போட்டியிட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.
பலத்தை காட்டுவோம்
சமத்துவ மக்கள் கட்சிக்கென்று குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதம் இருப்பதாக குறிப்பிட்ட சரத்குமார், அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டும் என்றும், அப்போது தான் அவர்களுடைய தனிப்பட்ட பலம் தெரிய வரும் என்றும் பேசினார். சட்டசபை தேர்தலில், தனித்துப்போட்டியிட்டு சமத்துவ மக்கள் கட்சியின் பலத்தை காட்ட திட்டமிட்டிருப்பதாக சரத்குமார் கூறினார்.
அதிமுக கூட்டணி
தனித்து போட்டியிடுவது பற்றி பேசிய சரத்குமார் பின்னர் என்ன நினைத்தாரோ, சமத்துவ மக்கள் கட்சி இன்னமும் அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது என்று கூறினார். அதிமுக தனித்து போட்டியிடப்போகிறதா, கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்று உறுதியாக அறிவிக்காத நிலையில் அதிமுகவின் கூட்டணியை நம்பியுள்ள கட்சியினர் பாடுதான் படு திண்டாட்டமாக உள்ளது.