ஜல்லிக்கட்டு நடந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்- முதல்வரிடம் உறுதி
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தமிழ்நாடு எங்க பூமி... மாடு எங்க சாமி... வாடி வாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் என்று முழக்கமிட்டவாரே இரண்டு நாட்களாக போராடி வருகின்றனர் இளைஞர்கள்.
சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் திரண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடி வருகின்றனர். இரவு, பகல் பாராமல் நீடிக்கும் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த போராட்டத்தைக் கைவிடும்படி போலீசார், சென்னை மாவட்ட நிர்வாகம் என பல தரப்பும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போராட்டக்காரர்களை நேரில் அழைத்து பேசினார்.
பிரதமரை சந்திக்க டெல்லி புறப்படும் முன்பாக முதல்வர் ஒ.பி.எஸ் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது போராட்டத்தைக் கைவிடும்படி முதல்வர் கேட்டுக் கொண்டார். எனினும், இதனை ஏற்க மறுத்துவிட்ட போராட்டக்குழுவினர், ஜல்லிக்கட்டு தடை நீக்கப்படும் வரை போராட்டத்தைக் கைவிடும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
முதல்வர் அறிக்கை விட்டாலோ, நேரில் பேச்சுவார்த்தை நடத்தினாலோ போராட்டத்தைக் கைவிடுவோம் என்று இளைஞர்கள் கூறி வந்தனர். ஆனால் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியும் போரட்டத்தைக் கைவிட இளைஞர்கள் மறுத்து விட்டனர்.
இந்த விவகாரத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கவும் போராட்டக்குழுவினர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன்பிறகே, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கும் ஓ.பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டு தடையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவார் என்று தெரிகிறது.