யாரெல்லாம் கலப்படம் செய்றாங்கன்னு எப்படி சொல்றது.. ரகசியத்த பூரா கேக்காதீங்க- ராஜேந்திர பாலாஜி
பாலில் கலப்படம் செய்யப்படும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அரசு கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உணவு பாதுகாப்பு ஆணையர் அமுதா ஐஏஎஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
கலப்பட ஆய்வு
எல்லா நிறுவனங்களும் கலப்படம் செய்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. சில நிறுவனங்களின் பாலை ஆய்வு செய்ததில் ரசாயனம் கலக்கப்பட்டிருந்தது தெரிந்தது. மாவட்ட மற்றும் மாநில அளவில் பாலில் ரசாயனம் குறித்த ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரிஜினல் பால்
மக்களுக்கு ஒரிஜினல் பால் கிடைக்கம். கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் இனி தமிழகத்தில் இயங்க முடியாது. தரமாக இயங்கும் நிறுவனங்களுக்கு மரியாதை அளிக்கப்படும். தப்பு செய்யும் நிறுவனங்கள் தமிழ் நாட்டில் தொழில் செய்ய முடியாது. சென்னையில் நடத்திய ஆய்வு முடிவுகள் அரசுக்கு கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில்தான் நான் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தேன்.
கலப்படமில்லா ஆவின்
தமிழக அரசு நடத்தும் ஆவின் பாலில் கலப்படம் இல்லை. வேண்டுமென்றால் இந்திய அரசு நடத்தும் ஆய்வகங்களில் ஆய்வு நடத்தி பாருங்கள். அப்போது ஆவின் பாலில் எந்தவித கலப்படமும் இல்லை என்பது தெரிய வரும்.
எச்சரிக்கை
என் நோக்கம் மக்களை அச்சப்படுத்துவது அல்ல. மக்களை எச்சரிப்பதுதான். அப்போதுதான் மக்கள் நல்ல பாலைத் தேடிச் செல்வார்கள். தயிர் என்ற பெயரில் கெமிக்கல் கலந்த ஒன்றை மக்களுக்கு விற்கப்படுகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.