எங்க "கலரை" தொடாதே.. அதிமுகவை எதிர்த்து கிளம்பும் புது அக்கப்போரு!
தங்கள் கொடியின் அடிப்படை நிறங்களை அதிமுக பயன்படுத்தக் கூடாது என்று அண்ணா எம்ஜிஆர் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சென்னை : அதிமுக கொடியில் தங்கள் கட்சியின் அடிப்படை நிறங்கள் பயன்படுத்தப்படுவதாக அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் என்ற (யாருக்குமே தெரியாத) ஒரு கட்சி சென்னையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளது.
அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து அதிமுக பல்வேறு சறுக்கல்களைக் கண்டு வருகிறது. இரண்டாக பிளவுபட்டு ஈபிஎஸ் அணி, ஓ.பிஎஸ் அணி என செயல்பட்டு வருகிறது.
அதிமுகவில் நிலவும் அக்கப்போர்களுக்கு மத்தியில் அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தக் கட்சியின் சார்பில் (இப்படி ஒரு கட்சி இருக்கான்னு கேட்கப்படாது!) தென்சென்னைக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் "எங்கள் கொடியின் அடிப்படை அடையாள நிறங்களான கருப்பு, வெள்ளை, சிவப்பு உள்ளிட்டவற்றை பயன்படுத்தவதை அதிமுகவே நிறுத்து! நிறுத்து!" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அதிமுகவின் வேஷ்டி, துண்டு, பேனர், சுவர் விளம்பரம் மற்றும் கொடிக்கம்பங்களிளும் இவற்றை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று போஸ்டரில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்ணா எம்ஜிஆர் திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சி அலுவலகம் மற்றும் கட்சி பதிவு எண்ணும் தெளிவாக குறிப்பிட்டு இந்த போஸ்டர்கள் அச்சிடப்பட்டுள்ளன.
ஜெயலலிதா இறந்த பின்னர் கட்சியினருக்கே ஒரு மெத்தனம் வந்து விட்டதாக சொல்லப்படும் நிலையில் இந்தக் கட்சியும் தங்கள் பங்கிற்கு புது அக்கப்போரை கிளப்பியுள்ளது.