நாகர்கோவிலில் 1 மில்லியன் அமெரிக்க டாலரை மாற்ற முயன்ற 6 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரசிங்கபுரத்தைச் சேர்ந்த 2 பேர், களக்காட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 6 பேர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு பணபரிமாற்ற மையத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றனர்.
அங்கு இவர்கள் ஒரே தாளாக வைத்திருந்த 1 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை மாற்ற கொடுத்தனர். இந்த டாலர் பணத்தை வாங்கி பார்த்த அம்மைய அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அமெரிக்காவில் இவ்வளவு பெரிய தொகைக்கு பணத்தாள் புழக்கத்தில் இல்லையே என்ற சந்தேகமும் ஏற்பட்டதால் அலுவலர்கள் வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அந்த நிறுவனத்திற்கு சென்று 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த அமெரிக்க டாலர் பணத்தையும் கைப்பற்றினார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போதுகைது செய்யப்பட்டவர்கள் முரண்பட்ட தகவல்களை அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
அமெரிக்க டாலரை இங்கு பணமாக மாற்ற முயற்சித்து மோசடி செயலாக போலீசார் கருதினர்.இதையடுத்து இவர்கள் 6 பேர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம்: 1. கணேசன் (35)2. பழனி (44) விக்கிரமசிங்கபுரம், 3. மாரியப்பன் (28) களக்காடு, 4. ஜெரால்டு வில்லியம் ஜோஸ் (50), ராமன்புதூர் நாகர்கோவில், 5. ஷெனாய்சீலன் (28) மறவன்குடியிருப்பு நாகர்கோவில் 6. டென்னிஸ் (42) மாடத்தட்டுவிளை.
இவர்களில் சணேசனுக்கு மும்பையில் உள்ள அவரது சகோதரர் மூலமாக இந்த அமெரிக்க டாலர் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த டாலரை இவர்கள் மாற்ற முயற்பட்டபோது கைது செய்யப்பட்டனர். ஜெரால்டு வில்லியம்ஜோஸ் ஆசிரியராக பணியாற்றி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் கூறியபோது,கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1 மில்லியன் அமெரிக்க டாலர் கடந்த 30 ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்டதாகும். இது அமெரிக்காவில் இப்போது புழக்கத்தில் இல்லை. அங்கு 100 டாலர் பணம்தான் அதிகபட்சமாக புழக்கத்தில் உள்ளது. இந்த பணத்தாளை மாற்ற முயன்ற குற்றத்திற்காக இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர் என்றார்.