அதிமுக இணையும்போது தமிழகத்தில் இருப்பதை அமித் ஷா விரும்பவில்லை?
சென்னை: பாஜக தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை மீண்டும் தள்ளிப் போயுள்ளது. தமிழக அமைச்சரவை மாற்றம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும் கூட அதிமுக அணிகள் இணையும்போது தான் தமிழகத்தில் இருப்பதை அமித் ஷா விரும்பவில்லை என்று சொல்கிறார்கள்.
2வது முறையாக அமித் ஷாவின் தமிழக வருகை தள்ளிப் போயுள்ளது. இது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும் கூட இதற்கு காரணம் பலவாறாக பேசப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடக்கவுள்ளது ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதேசமயம், அதிமுக அணிகள் இணைப்புதான் அமித் ஷாவின் பயணம் தள்ளிப் போயுள்ளதற்குக் காரணம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
உருட்டப்படும் பாஜக தலை
அதிமுக விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே பாஜகவின் தலைதான் உருட்டப்பட்டு வருகிறது. அதிமுகவை பிளந்ததே பாஜகதான். அதிமுகவின் அனைத்து அணிகளையும் பாஜகதான் கட்டுப்படுத்தி வருகிறது என்பது தமிழக மக்களின் பொதுவான பேச்சாக உள்ளது.
இணைப்புக்கும் பாஜக காரணமா?
இப்போது அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கும் பாஜகதான் காரணம் என்றும் பேச்சு அடிபடுகிறது. பாஜகவின் ஆலோசனை மற்றும் அறிவுரையின்பேரில்தான் அதிமுக இணையவுள்ளதாகவும் பேசப்படுகிறது.
தவிர்க்க விரும்பும் அமித்ஷா
இந்த நிலையில் அமித் ஷாவின் வருகையையும், அதிமுக அணிகள் இணைப்பையும் இணைத்து பேச ஆரம்பித்ததை அமித் ஷா ரசிக்கவில்லையாம். அதிமுக அணிகள் இணையும் சமயத்தில் தான் தமிழகத்தில் இருந்தால் அதற்கு வேறு மாதிரி கலர் தரப்படும் என்பது அமித் ஷாவின் எண்ணம்.
கேன்சல்
இதன் காரணமாகத்தான் அமித் ஷா தனது பயணத்தை மீண்டும் தள்ளிப் போட்டு விட்டதாக பேசப்படுகிறது. இருப்பினும் உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை. பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சிக் குழப்பம் காரணமாக அமித் ஷாவின் முதல் பயணம் ரத்தானதாக பேச்சு அடிபட்டது நினைவிருக்கலாம்.