கட்சிகள் வரும், போகும்.. 2016 தேர்தலை வலிமையாக சந்திப்போம் - அமீத் ஷா
சென்னை: கூட்டணிக்குள் சில கட்சிகள் வரும், சில கட்சிகள் போகும். எப்படி இருந்தாலும் 2016 சட்டசபைத் தேர்தலை பாஜக மிக வலிமையாக சந்திக்கும் என்று பாஜக தலைவர் அமீத் ஷா கூறியுள்ளார்.
சென்னையில் இன்று காலை பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார் அமீத் ஷா. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அமீத் ஷாவின் பேட்டியிலிருந்து....
2014 பாராளுமன்ற தேர்தல் இந்திய ஜனநாயக சரித்திரத்தில் ஒரு விசேஷமான ஆண்டாக அமைந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு தமிழகத்தில் 19 சதவீதம் வாக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
மோடி அரசு பதவி ஏற்ற பிறகு விலைவாசி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. விலை உயர்வு குறியீடு பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை 6 மாதத்தில் 10 முறை குறைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி துறை வளர்ச்சி அடையவும், வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கவும் மேக் இன் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொருளாதார வளர்ச்சி விகிதம் காங்கிரஸ் ஆட்சியில் 4.6 ஆக இருந்தது. கடந்த 3 மாதத்தில் 5.7 ஆக உயர்ந்துள்ளது. வெளியுறவு கொள்கையிலும் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. அண்டை நாடுகளுடன் நல்லுறவு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். நாடு முழுவதும் 10 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை திரட்டுவோம்.
தமிழகத்தைப் பொருத்த வரை தி.மு.க., அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சிக்கு வந்ததால் மிகப் பெரிய பின்னடைவை தமிழகம் சந்தித்துள்ளது. 11 வது ஐந்தாண்டு திட்டத்தில் எல்லா மாநிலத்திலும் 11 சதவீதம் வளர்ச்சி இருக்கும் போது தமிழகத்தில் 8 சதவீதம் தான் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பு திட்டத்திலும் 11வது இடத்தில் இருக்கிறது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 9 சதவீதமாக இருக்கிறது. தனிநபர் வருமான உயர்வில் தமிழகம் 9 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
2016 தமிழக சட்டசபைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவித்து சந்திக்கும். எந்த கட்சியுடனும் மறைமுக ஒப்பந்தம் ஏதும் இல்லை. நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் எங்கள் கட்சி நிர்வாகிகள் மாநில அரசை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள். திராவிட கட்சிகளை நாங்கள் விமர்சிக்கவில்லை. அரசின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம். கூட்டணி என்று வரும் போது கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். சில கட்சிகள் வெளியே போகும், சில கட்சிகள் உள்ளே வரும். ஆனால் 2016 சட்டசபைத் தேர்தலில் மிக வலிமையான முறையில் பா.ஜ.க தலைமையில் தேர்தலை சந்திப்போம்.
யார் முதல்வர் வேட்பாளர் என்பதை மக்களிடம் அறிவித்து விட்டுத் தான் தேர்தலில் நிற்போம். பா.ஜ.கவுக்கு முதல்வர் வேட்பாளர் வேண்டும் என்ற முயற்சி இருக்கும். 2016 தேர்தலில் முக்கிய அரசியல் கட்சியாக பா.ஜ.க விளங்கும். கட்டாய மதமாற்ற தடை சட்டத்தில் பா.ஜ.கவின்நிலைப்பாடு பற்றி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராளுமன்றத்தில் தெளிவாக கூறியுள்ளார்.
கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருவதை மற்ற கட்சிகள் ஆதரிக்க தயாரா? ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசிய சிந்தனை உள்ள அமைப்பு. மோகன் பகவத் அறிக்கை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. சுப்பிரமணியசாமி எங்கள் கட்சி உறுப்பினர், தலைவர். அதே நேரத்தில் கட்சியின் கொள்கைகளும், நிலைப்பாடுகளும், அதிகாரப்பூர்வ பத்திரிகை தொடர்பாளர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் மூலமே அறிவிக்கப்படும் என்றார் அவர்.