தியேட்டர், பஸ் ஸ்டாண்ட் என எதையும் விடாதீங்க.. பாஜக நிர்வாகிகளுக்கு அமீத் ஷா போட்ட உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் 60 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் அமீத் ஷா உத்தரவிட்டுள்ளார். உறுப்பினர்களை எப்படி சேர்க்க வேண்டும் என்றும் அவர் கட்சி நிர்வாகிகளுக்கு ஐடியா கொடுத்துள்ளாராம்.
கட்சியில் சேரும் உறுப்பினர்கள் உண்மையான கட்சி விசுவாசிகளாக இருக்க வேண்டும். ஒரு போலி உறுப்பினர் கூட கட்சியில் இருக்கக் கூடாது என்றும் அவர் கண்டிப்பாக கூறியுள்ளாராம்.
சென்னை வந்த அமீத் ஷா இரண்டு நாட்கள் இங்கு முகாமிட்டிருந்தார். சனிக்கிழமை மாலை அவர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். நேற்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது அமீத் ஷா நிர்வாகிகளிடம் பேசியதாக கூறப்படுபவை....
தமிழகத்தில் உள்ள, 60 ஆயிரம் பூத்துகளிலும், தலா 100 பேர் வீதம், 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதை நீங்கள் செய்யுங்கள், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். போலி உறுப்பினர் ஒருவர் கூட கட்சியில் இருக்கக் கூடாது. அனைவரும் உண்மையான தொண்டர்களாக இருக்க வேண்டும்.
மகாராஷ்டிராவில் இப்படித்தான் நான் செய்தேன். அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளோம். எனவே தமிழகத்திலும் அதை சாதிக்க முடியும்.
உறுப்பினர் சேர்க்கையை முடித்த பின்னர் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாம் முடிவு செய்யலாம் என்றாராம் அமீத் ஷா.
அத்துடன் நில்லாமல் உறுப்பினர் சேர்க்கையை எப்படி மேற்கொள்ள வேண்டும், என்ன மாதிரியான அணுகுமுறை பாஜகவினர் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் யோசனை கூறியுள்ளாராம் அமீத் ஷா.
குக்கிராமம் முதல் மாநகரங்கள் வரை, மூலை முடுக்கு, சந்து பொந்து எல்லா இடங்களிலும், ஒரே நாளில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளாராம்.
பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் என மக்கள் கூடும் இடம் அனைத்திலும் உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக, ஜனவரியில் ஒரு ஆய்வு கூட்டம், பிப்ரவரியில் ஆய்வு கூட்டம் என, மாதந்தோறும் நடத்த வேண்டும். ஒவ்வொரு பூத்திலும், பா.ஜ.க வுக்கு கமிட்டியை உருவாக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளாராம்.
மேலும் உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுங்கள். அந்தந்த ஊர்களில் உள்ள கட்சி நிர்வாகிகளில் உள்ளூர் பிரச்சினைகளில் முதல் ஆளாக நின்று அதைத் தீர்க்க முயல வேண்டும். அதற்காக கடுமையாக முயற்சிக்க வேண்டும் என்றாராம்.
பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பாஜகதான் முன்னால் வந்து நிற்கிறது என்று மக்கள் மத்தியில் பாஜக அடையாளம் காணப்பட வேண்டும். அதுதான் முக்கியம் என்றும் அவர் அறிவுறுத்தினாராம்.