ஜெயலலிதா ஒரு தெய்வப்பிறவி... உடம்புக்கு எதுவும் வராது - விஜிலா சத்யானந்த்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு தெய்வப்பிறவி என்பதால் அவர் உடல்நிலைக்கு எந்த பிரச்சனையும் வராது என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் சரியாகிவிட்டதாக கூறினாலும் மூன்றாவது நாளாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிமுகவினர் வழிபாடு
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததும் ஆயிரக்கணக்கான அதிமுக கட்சி தொண்டர்கள் மருத்துவமனை வளாகம் முன் கூடி வழிபாடுகளை நடத்தினர். ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி பல்வேறு கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜிலா சத்யானந்த்
அதிமுக மகளிர் அணி சார்பாக மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் மற்றும் அதிமுக ஊடக தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரார்த்தனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி., விஜிலா சத்யானந்த்,"ஜெயலலிதா பூரண நலத்துடன் இருக்கிறார்.அவர் உடல்நிலைக்கு ஒன்றும் ஆகாது.அவர் ஒரு தெய்வப்பிறவி.அவருக்கு சில தெய்வீக சக்திகள் உள்ளன.எனவே அவர் விரைவில் வீடு திரும்புவார். என்று கூறினார்.
நலம்பெற பிராத்தனை
செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர். சரஸ்வதி, அம்மா நன்றாக இருக்கிறார்கள். சீக்கிரம் வீட்டிற்கு வருவார்கள் என்று கூறினார். இதேபோல திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் ஆகியோர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.