அரசு விளம்பரங்களில் "அம்மா", "புரட்சித்தலைவி" வார்த்தை.. விதி மீறல் இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை : தமிழக அரசு விளம்பரங்களில் புரட்சித் தலைவி, அம்மா என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் எந்தவிதி மீறலும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அரசு விளம்பரங்களில் குடியரிசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தவிர பிற பதவிகளில் உள்ளவர்களின் புகைப்படங்களை அரசு விளம்பரங்களில் வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு கடந்த மே மாதம் பத்திரிகைளில் முழு பக்க விளம்பரம் கொடுத்துள்ளது. அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என்றும் அம்மா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரம் ஆளும் கட்சியின் 4 ஆண்டு கால சாதனை என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வரிப்பணத்தில், இதுபோல விளம்பரம் செய்தது சட்டவிரோதமாகும். எனவே, அந்த விளம்பரம் வெளியிட்ட தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி எதிர்காலத்தில் இது போன்ற விளம்பரம் செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். முதல்-அமைச்சரை, புரட்சித்தலைவி, அம்மா என்று புகழ்ந்து அரசு செலவில் விளம்பரம் செய்யக்கூடாது என்று தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரத்தினம் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, ‘அம்மா, புரட்சித் தலைவி என்று விளம்பரத்தில் குறிப்பிடுவதால் என்ன பிரச்சினை? காமரேட் என்று அழைப்பது கொள்கை ரீதியான வார்த்தை. அதை தவறாக எடுத்துக்கொள்ள முடியாது. தனி நபரை துதிபாடுவதாகவும் கருத முடியாது. இந்த வார்த்தையை தவறாக எடுத்துக்கொள்ள முடியாது.
மேலும், அரசு விளம்பரத்தில் முதல்-அமைச்சரின் புகைப்படம் வெளியானது என்று கூற ஆதாரத்தை எதையும் தாக்கல் செய்யப்படவில்லை. அரசு விளம்பரங்களில் புரட்சித்தலைவி, அம்மா என்ற பெயர்களை பயன்படுத்துவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.