சவுடாம்பிகை அம்மனுக்கு கரகம்... முளைப்பாரி - எங்க ஊர் திருவிழா
கிராமங்களில் நடைபெறும் பொங்கல் உற்சவ விழாவில் பங்கேற்பது மனதிற்கு இதமானது. உற்சாகம் தரக்கூடியது.
மதுரை: சொந்த மண்ணை விட்டு, வெளியூர் வெளிநாடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஊர் திருவிழாவில் பங்கேற்பது உற்சாகம் தரக்கூடியது.
மதுரை மாவட்டம் டி. குண்ணத்தூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு கரகம் எடுத்து சாமி கும்பிடுவதை காண வெளியூர், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எல்லாம் கூடுவார்கள்.
பிள்ளையாருக்கு பொங்கல் வைப்பது தொடங்கி கிராம தேவதை வடக்கு வாச்செல்லியம்மன் பொங்கல், குலதெய்வமான சவுண்டம்மனுக்கு கரகம் எடுப்பது, அம்மன் ரதி சேர்த்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுப்பது என தினசரியும் திருவிழாதான்.
ஊர் இளவட்டங்கள் ஒரு பக்கம் அம்மனை அழைக்க கத்தி போட.... குமரி பெண்கள் முளைப்பாரி வைத்து அம்மனுக்கு கும்மி கொட்ட, வேடிக்கைகள் களை கட்டும்.
வடக்குவாச்செல்லி அம்மன்
டி.குண்ணத்தூரில் வசிக்கும் மக்களின் கிராம தேவதை வடக்குவாச்செல்லி அம்மன். முதல் மரியாதை வடக்குவாச்செல்லிக்குத்தான். பிள்ளையாரை கும்பிட்டு விட்டு 2 கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று பொங்கல் வைத்து வழிபடுவது தனி சுகம்.
கல்லும் முள்ளும்
இப்பொழுதாவது தார்சாலைகள் போடப்பட்டுள்ளன. முன்பெல்லாம் கல்லும் முள்ளும் காலில் குத்த... அக்னி நட்சத்திர வெயில் அனலாய் தகிக்க சுடச் சுட நடந்து போய் பொங்கல் வைத்து வழிபடுவோம். இப்போது வாகன வசதிகள் பெருகிவிட்டதால் ஷேர் ஆட்டோ, வேன்கள், கார்களில் செல்ல முடிகிறது. பொங்கல்பானை சுமந்து வரும் பெண்கள் இன்னமும் நடந்து வந்துதான் பொங்கல் வைக்கின்றனர்.
மல்லிகை கரகம்
மாலையில் முத்துக்காளம்பட்டியில் எழுந்தருளியிருக்கும் ராமலிங்க சவுடாம்பிகை அம்மனுக்கு கரகம் எடுத்து வழிபட்டு, அம்மனை அழைத்து வந்து குண்ணத்தூரில் உள்ள சவுடாம்பிகை கோவிலில் வைத்து வழிபடுவோம்.
கத்தி போட்டு கரகம் எடுத்து
அம்மனை அழைக்க கத்தி போட்டு உற்சாக குரல் எழுப்பி வீரர்கள் அழைத்து வருவார்கள். வழியெங்கும், எழுமிச்சை தூவி எந்த தடங்களும் இல்லாமல் அம்மனை அழைத்து வருவதை காண்பதே ஒருவித பரவசம். கத்தி போடும் வீரர்களை காண காண உள்ளத்தில் அச்சம் கலந்த ஆனந்தம் குடியேறும்.
மல்லிகை கரகம் ஏன்
அலங்கரிக்கப்பட்ட மல்லிகை கரகம், பட்டுக் குடைகள், கத்திய பெட்டி என்றழைக்கப்படும் பூஜை பெட்டி சகிதமாக கரகம் புறப்பட முன்னாலே வீரக்குமாரர்கள் எனப்படும் அலகு வீரர்கள் கத்திகளால் தங்கள் உடல்களை கீறி, சவுடேஸ்வரி அம்மனை வரவேற்று அழைத்துச் செல்வார்கள்.
முளைப்பாரி கும்மி பாட்டு
பெண்கள் அனைவரும் ஒரு வாரம் காப்பு கட்டி விரதம் இருந்து முளைபாரி போடுவார்கள். நன்கு வளர்ந்து செழித்த முளைப்பாரியை எடுத்து வந்து அம்மனுக்கு முன்பு வைத்து வளையல்கள் குலுங்க குலுங்க கும்மி கொட்டி ஆடும் அழகே அழகு.
கிராமம் செழிக்கும்
முளைபாரியை வைத்து வழிபட்டு ஊர்வலம் வந்து மூன்றாம் நாள் நீர் நிலைகளில் கரைப்பார்கள். இந்த ஆண்டு முளைப்பாரி நன்றாக செழித்து வளர்ந்துள்ளதால் கிராமம் வளர்ச்சியடையும், மழை பொழிவு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இதுபோன்ற திருவிழாக்களில் பங்கேற்பதே ஒரு உற்சாகமான விசயம்தான்.