'சாகர் நிதி' வர தாமதம்... மாயமான ஏஎன் - 32 விமானத்தை தேடுவதில் சிக்கல் நீடிப்பு
சென்னை: தேசிய கடல் ஆய்வு தொழில்நுட்பவியல் நிறுவனத்துக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல் 'சாகர் நிதி' சென்னை வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் . மாயமான ஏஎன் -32 ரக விமானத்தை தேடும் பணியில் சிக்கல் நீடிக்கிறது. விமானம் மாயமாகி 7 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்காததால் அதில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை தாம்பரம் விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் மாயமாகி இன்றுடன் 7 நாட்கள் ஆகிறது. சென்னையில் இருந்து கடந்த 22ம் தேதி அந்தமான் போர்ட்பிளேயர் கிளம்பி சென்ற அந்த விமானம் சுமார் 145 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் சென்றபோது திடீரென அதன் தகவல் தொடர்பு துண்டானது.
விமானத்தில் கேப்டன் பாட்சரா, துணை விமானி பி.கே.நந்தல், குணால் டர்பேட்டி, விமானப்படை பெண் அதிகாரி தீபிகா, பொறியாளர் ஆர்.ரஞ்சன், தொழில்நுட்ப ஊழியர் ஜி.சவுத்ரி, தமிழகம் தூத்துக்குடியை சேர்ந்த கடலோர காவல்படை மாலுமி முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 29 பேர் பயணித்துள்ளனர்.
தேடுதல் வேட்டை
கடற்படை, கடலோர காவல்படை, விமானப்படை, ராணுவம் என முப்படைகளும் இணைந்து மாயமான விமானத்தை வங்கக் கடல் பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றன. இந்த பணியில் 20க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், விமானப்படை விமானங்கள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடல் ஆழத்தில் தேடல்
சுமார் 3,500 மீட்டர் கடல் ஆழத்தில் விமானம் விழுந்ததாக கூறப்படுகிறது. கடலுக்கு அடியில் விமானத்தின் பாகம் ஏதாவது கிடந்தால் கப்பலில் உள்ள நவீன கருவி மூலம் தடயத்தை சேகரித்து அதன் மூலம் விமானத்தை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். இருப்பினும் இதுவரை விமானத்தின் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இரவு பகலாக தேடும் பணி
நேற்று 6வது நாளாக நடந்த தேடுதல் பணியிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். இருப்பினும் முழு நம்பிக்கையுடன் இரவு, பகலாக மாயமான விமானத்தை தேடும் பணிகள் நடந்து வருகிறது.
மனோகர் பாரிக்கர்
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, `மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கடலில் இருந்து சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.
தேடும் பணி தொடரும்
அந்த பொருட்கள், மாயமான விமானத்திற்குரியதுதானா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ஆனால், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. விமானத்தை தேடும் அத்தனை பணிகளும், துரித வேகத்தில் நடந்து வருகின்றன. கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூறினார்.
7 நாட்கள் கடந்தது
இஸ்ரோ உதவியுடன் ரிசர்ட் வகை செயற்கைகோள் மூலம் படம் எடுத்து தடயத்தை சேகரிக்கும் முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், விமானம் மாயமாகி 7 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்காததால் அதில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆராய்ச்சி கப்பல்
தேசிய கடல் ஆய்வு தொழில்நுட்பவியல் நிறுவனத்துக்கு சொந்தமான சாகர் நிதி கப்பல் கடல் ஆராய்ச்சி பணிக்காக மொரிஷீயஸ் நாட்டிற்கு சென்றிருந்தது.விமானத்தை தேடும் பணிக்காக அக்கப்பல் அவசரமாக இந்தியா வரவழைக்கப்பட்டுள்ளது.
சாகர் நிதி வர தாமதம்
மொரீஷீஸ் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி கப்பல் ‘சாகர் நிதி' சென்னை வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். அந்த கப்பலில் கடலுக்கு அடியில் அதிக ஆழத்தில் கிடக்கும் பொருட்களை துல்லியமாக படம் பிடித்து காட்டக் கூடிய நவீன கருவி உள்ளது.
சிக்கல் நீடிப்பு
அக்கப்பலுக்கு அடியில் நவீன ரோபோக்கள் பொருத்தி அதன் மூலமும் விமான பாகங்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விமானத்தை தேடும் பணியில் சிக்கல் நீடிக்கிறது.