29 பேருடன் விமானம் மாயமானது அதிர்ச்சி அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் வழியில் 29 பேருடன் மாயமாகி இருப்பது தாங்கி கொள்ள முடியாத அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ''இந்திய விமானப் படைக்கு சொந்தமான AN-32 விமானம் சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் வழியில் 29 பேருடன் மாயமாகி இருப்பது தாங்கி கொள்ள முடியாத அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது. விமானத்தில் பயணித்த பாதுகாப்பு துறையைச் சேர்ந்தவர்கள் தற்போது என்ன நிலையில் இருக்கிறார்கள் என்ற அச்ச உணர்வும் ஏற்படுகிறது.
கடந்த ஆண்டும் இது போன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டு அது துயரத்தில் முடிந்த நிலையில், தற்போது இன்னொரு விமானம் மாயமாகி இருப்பது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் பெரும் பதற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே சங்கடமாக இருக்கிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழக மக்களின் சார்பில் அவர்களுக்கு நம்பிக்கையைத் தர வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
இந்நிலையில், ஜூலை 7-ம் தேதி அந்த விமானத்தில் ஹைட்ராலிக் கசிவு ஏற்பட்டதாகவும், 14 -ம் தேதி அழுத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் வரும் பத்திரிகை செய்திகள் மிகவும் வேதனையளிக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் விமானம் இயக்கப்பட்டிருப்பதும், அது மாயமாய் மறைந்திருப்பதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது. தேடுதல் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில், விமானத்தின் தற்போதைய நிலை குறித்த உண்மைத் தகவல்கள் விரைந்து கிடைக்க வேண்டும் அது அனைவருக்கும் நிம்மதியளிக்கும் தகவலாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறேன்.
இனியாவது இத்தகைய நிகழ்வுகள் ஏற்படாத வகையில் விமானங்களின் பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்று பழுதுள்ள விமானங்களைப் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.