ஜெ. கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் ஒருவருக்கு நிபந்தனை ஜாமீன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு நீலகிரி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கோத்தகிரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் கைதாகி இருந்த ரமேஷ்சாமி என்பவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார். மேலும், பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டன.
இந்தக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போன்று கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். இதுகுறித்து, கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் 11 பேருக்கு இதில் தொடர்புள்ளது எனக் கண்டறிந்தனர்.
அதில் முதன்மை குற்றவாளியான ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார். இந்நிலையில் 10 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களில் உதயகுமார், சதீசன், தீபு, மனோஜ், குட்டி ஆகிய ஐவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ்சாமி என்பவர் ஜாமீன் கேட்டு நீலகிரி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அவருடைய மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு நிபந்தனை ஜாமீனை வழங்கி நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கோத்தகிரி காவல் நிலையத்திற்குத் தினமும் சென்று ரமேஷ்சாமி கையெழுத்திட வேண்டும்.