அண்ணே நீங்க அதுக்கு சரிபட்டு வரமாட்டீங்க..! வடிவேலுக்கு ஒரு திறந்த மடல்!!
சென்னை: வடிவேலு அண்ணே.. பார்க்க நம்ம பக்கத்து வீட்டுக்கார அண்ணன் மாதிரியே இருப்பதால் இப்படி உரிமையோடு சொல்லலாம் அப்படீன்னு நெனைக்கிறேன்ணே..
நீ.......ண்ட இடைவேளைக்கு பிறகு ஒங்கள வெள்ளித்திரையில பார்க்க ஆவலோடு காத்திருக்கும், கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நானும் ஒரு ஆள் அண்ணே.
எலி படம் எப்போ வரும்.. நீங்க வர்ற சீனுவள காட்டியே கொழந்தைங்களுக்கு ஈசியா சோறு ஊட்டிரலாமுன்னு, லட்சம் தாய்மார்கள் ஏங்கிகிட்டு இருக்காங்கண்ணே. இருக்காதா பின்ன. குழந்தைங்க மனசுல பச்சக்குன்னு ஒட்டிகிட்ட ஒரே நடிகர் நீங்கதாண்ணே.
தியேட்டரே உங்களை நம்பிதான்
கார்டூன் சேனலுக்கு ஈக்குவலா ஆதித்யா சேனலையும் கொழந்தைங்க மத்தில பிரபலப்படுத்துனது நீங்கதான. வடிவேலு நடிச்ச படம் வருதுன்னா, குழந்தைங்க கூட்டத்தால, பாப்கார்னும், கூல்ட்ரிங்சும் அதிகமா விக்குதுன்னு தியேட்டர்ல கடை வச்சிருக்கவங்கல்லாம் புளகாங்கிதம் அடைஞ்சதும் உங்களாலத்தான. நீங்க நடிச்ச படமுன்னா, ஹீரோவுக்காக படம் பார்க்க வந்தவங்கள விட, உங்க ஹியூமருக்காக படம் பார்க்க வந்தவங்கதான் அதிகமா இருப்பாங்க.
ஆஹான்..
ஆயிரம் கவலையோட வீட்டுக்கு வந்தாலும், ஆதித்யா சேனல்ல உங்க முகத்த பார்த்ததும், மனசு ஆடிக்காத்துல பறக்குற இலவம் பஞ்சு கணக்கா மாறிருமே. பக்கம் பக்கமா பேசியோ, உருண்டு, கதறியோ காமெடி பண்ணுனவங்கள உலகம் பார்த்திருக்கு. ஆனா, 'ஆஹான்' அப்படீங்கிற ஒத்த வார்த்தையிலையே உலகத்த கட்டிப்போட்ட காமெடியன் நீங்கதான பாஸ்.
குட்டீஸ்களின் தேசிய கீதம்
அவ்வ்வ்.. ஹையோ..ஹையோ.. என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு...மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு.. இதையெல்லாம் தனியா படிச்சி பார்த்தா வெறும் வார்த்தை.. ஆனா, பல குழந்தைகளுக்கு இது வாழ்க்கை. குட்டிகள் உலகின் தேசிய கீதம்.
நல்லாத்தான போச்சி..
நல்லாத்தான போய்கிட்டு இருந்து.. அப்படீங்கிற உங்க டயலாக்க மாதிரியே நல்லாத்தான் போனது உங்க வாழ்க்கையும். ஆனால், யாரு கண்ணு பட்டுச்சோ, திடீருன்னு, மைக்க புடிச்சிகிட்டு ஊர் ஊரா நீங்க தம் கட்டி அரசியல் பேசினப்போ, கொஞ்சம் திக்குன்னுதான் இருந்துச்சி.. எங்கையோ இடிக்குதே, இவருக்கு எதுக்கு இந்த வேலைன்னு புலம்பிய ரசிகர்களில் நானும் ஒருத்தன் அண்ணே.
கவுத்துபுட்டாய்ங்க மாப்பு
பேச்சுன்னா பேச்சு, கொஞ்சம் நஞ்சம் பேச்சா பேசுனீங்க.. சுத்தி இருக்குறவங்க கை தட்டதட்ட உங்களுக்கு அப்படி என்ன வெறி வந்துச்சுன்னே தெரியல அந்த பேச்சு பேசிபுட்டீங்க. ஆனா, அவுங்க கைதட்டி, விசில் அடிச்சது, நீங்க சொன்ன கருததுக்கு இல்லை, இதுவும் ஒரு காமெடின்னு நினைச்சுதான்னு உங்களுக்கு கொஞ்சம் லேட்டாதான் புகிஞ்சிருக்கும். ஆனா, உங்கள காமெடியனா பார்க்க பாதிக்கப்பட்டவங்க தயாராயில்லையே. அவங்க சீரியசால்லா பாத்துபுட்டாங்க.
யாருண்ணே வருவா?
இதனால, இழப்பு யாருக்கு.. உங்களுக்கா, நீங்க ஆதரிச்சு பேசுன கட்சிக்கா..? கண்டிப்பா கட்சிக்கு இல்ல. உங்களுக்கும், உங்க ரசிகர்களுக்கும்தான்ணே. ஆளும் கட்சி தடை பண்ணிட்டா, ஒரு நல்ல படத்த ரிலீஸ் பண்ண கூட உதவ வராதவங்க இருக்குற திரையுலகத்துல, உங்களுக்கு யாருண்ணே உதவுவா?
என்னா பேச்சு..
"வடிவேலுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்", "ஒழுங்கா படத்துல நடிச்சமா, நாலு காசு பாத்தோமான்னு இல்லாம, அரசியல் கேக்குதோ" அப்படீன்னு உங்க காதுபட பேசியவங்களும், பரிதாபத்துல உச்சு கொட்டியவங்களும்தான் அதிகம்.
இது தேவையா..
இப்போ ஏதோ காற்று கொஞ்சம் மாற்றி வீசியிருக்கு. கையில படம் வர ஆரம்பிச்சிருக்கு. நீங்க விட்டுட்டுபோன சிம்மாசனமும், இதுவர யாராலும் நிரப்பப்படாம காலியாத்தான் இருக்கு. ஏறி உட்கார்ந்தமா, காமெடியில ஒரு கலக்கு கலக்குனோமான்னு இல்லாம, அது என்னண்ணே பொசுக்குன்னு அப்படி பேசிப்புட்டீங்க.
பட்டும் திருந்தலைன்னா எப்படி?
எந்த வார்த்த இனி உங்க வாழ்க்கையில் மட்டுமில்ல, வாயிலும் இருக்காதுன்னு நினைச்சோமோ அந்த வார்த்தைய பேசிட்டீங்களேன்ணே.. படிச்சு திருந்தலாம், அடுத்தவங்க சொல்லியும் திருந்தலாம், நீங்க பட்டும் திருந்த மாட்டேன்னு அடம் புடிக்கலாமா அண்ணே.
எலிகளுக்கு இடமில்லை
அரசியல் ஒரு கடல். அங்க திமிங்கிலங்கள் வாழலாம், எலிகளும், தவளைகளும் வசிக்க அது இடமில்லைண்ணே. நீங்க ஒரு வெள்ளந்தி. மனசுல பட்டத பேசிருவீங்க. ஆனா, கைக்குள்ள கத்திய வச்சிகிட்டே, நாக்குல தேன் தடவி பேச வேண்டிய களம்ணே அரசியல். நீங்க அந்த விஷயத்துக்கு சரிபட்டு வரமாட்டீங்க!
இருக்குறது ஒரு வடிவேலுதாண்ணே
நமக்கு எது வருமோ அத செஞ்சிரனும். அதுல சாதிக்கனும். அரசியலில் உங்களை விட்டா ஆயிரம் பேர் இருப்பாங்க. ஆனா, சினிமாவுல எங்களுக்கு உங்களை விட்டா வேற வடிவேலு இல்லைன்ணே. காமெடிங்கிற பேருல சில பேரு போடுற மொக்கையால எங்க காது ரெண்டும் கிழிஞ்சி ரத்தமா வடிஞ்சிகிட்டு இருக்குன்ணே. அந்த கொடுமைகள்ல இருந்து மக்களை காப்பாற்ற நீங்க சினிமாவுக்கு வரணும்ணே. மறக்காதீங்க, இதுவும் மக்கள் சேவைதான்ணே.