மது விலக்கு.. அரசியல் கட்சிகளுக்கு ஒரு சக தமிழனின் மனம் திறந்த மடல்
சென்னை: மது விலக்கு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திறந்த மடல் அனுப்பிய ராமநாதன் மெய்யப்பன் தற்போது இதுதொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு சில கேள்விகளை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நமக்கு அனுப்பியிருக்கும் மடல்...
மதுவிலக்குக்காக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெவ்வேறு திசைகளில் ஒருங்கினைப்பில்லாமல் போராடிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியினருக்கு - உங்கள் குறிக்கோளில் சம்மதம் இருந்தாலும் கருத்துக்களில் அடிப்படை வேறுபாடு கொண்ட ஒரு சக தமிழனின் மனம் திறந்த மடல்...
மதுவிலக்கில் அரசு கெளரவம் பார்க்க வேண்டியதில்லை என்று எனது நிலையைத் தெள்ளத் தெளிவாக முதல்வரின் தனிப் பிரிவுக்கு எழுதிய கடிதம் மூலம் தெளிவு படுத்தி விட்டேன்...
இப்போது போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு வருவோம்...
இந்தக் கடிதம் மூலம் நான் உங்களை மட்டும் குறை கூற கிளம்பவில்லை என்பது தெளிவாகப் புரியும்...
1. மது விலக்கை உங்கள் தேர்தல் அறிக்கையில் எழுதுவதற்கு ஒரு நொடி போதும்... அதனை வோட்டு வாங்க மட்டும் பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறீர்கள்...
2. கள்ளச் சாராயத்தையும் விஷச் சாராயத்தையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று சம்பிரதாயத்துக்கு ஒரு வரி சேர்க்காமல் எப்படி சாத்தியப்படித்துவீர்கள் என்று இரண்டு பத்தி எழுதத் துணிச்சல் இருக்கிறதா?
3. இந்த வருவாய் இழப்பால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க இலவசம் எனும் பெயரில் ஏதும் கொடுத்து மயக்க சாத்தியம் இல்லை என்பதால் இலவசம் ஏதும் இல்லை என்று உங்கள் தேர்தல் அறிக்கையில் பகிரங்கமாக அறிவிக்க முடியுமா?
4. அதனால் அரசுக்கு ஏற்படும் நிதி/கடன் சுமையை சமாளிக்க விலை ஏற்றம் மற்றும் புதிய வரிகள் அவசியம் என்றும் அவற்றை அமல் படுத்த வேண்டும் என்றும் உங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பு எழுத முடியுமா?
5. மதுபானக் கடைகள் முன்பு நீங்கள் இன்று நடத்தும் போராட்டங்களை மது ஆலைகள் முன்னும் அவற்றின் உள்ளும் நடத்திக் காட்ட முடியுமா?
6. அனைவரின் குறிக்கோளும் ஒன்று தான்; நாங்கள் அரசியலுக்காக இதனை செய்யவில்லை இன்று சொல்லும் நீங்கள், அரசியல் சார்பின்றி ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்து அரசுக்கு எதிராகப் போராடினால், விளம்பரம் இல்லாமலேயே மக்கள் அனைவரும் உங்கள் பின் திரள்வார்களே? அரசும் இந்த விஷயத்தில் முடிவெடுக்க ஒரு கட்டாயத்துக்கு உள்ளாகுமே? ஏன் தயங்குகிறீர்கள்?
7. உங்கள் குறிக்கோள் மதுவிலக்கா? அல்லது அரசை முடக்க வேண்டும் என்பதா? உங்கள் அறிக்கைகளால் அல்ல - உங்கள் செயலால் ஒற்றுமையால் நிரூபியுங்கள்...
8. மது ஆலைகள் நடத்துபவர்களுக்கும் அது சார்ந்த தொழில் நடத்துபவர்களுக்கும் கட்சி சார்பில் போட்டியிட அவர்கள் ஆலையை மூடி ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தொகுதி ஏதும் ஒதுக்கப்பட மாட்டாது; அவர்களிடம் கட்சி நிதி வசூலிக்கப்பட மாட்டாது; கட்சிப் பதவி ஏதும் அவர்களுக்கோ அவர்கள் குடும்பத்தாருக்கோ வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்க நீங்கள் தயாரா? செய்தால் எங்களுக்கல்ல, உங்களுக்கும் உங்கள் போராட்டத்துக்கும் தான் லாபம்...
9. உணர்ச்சிவசப்பட்டுப் பேசி ஏன் மாணவர்களையும் மக்களையும் வன்முறைக்குத் தூண்டுகிறீர்கள்? இச்செயல் உங்கள் கோரிக்கையை மக்கள் மத்தியில் நீர்த்துப் போய் விடச் செய்யுமே?
10. அனைவரும் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றலாமே? அன்று கலைஞர் கைது செய்யப்பட்ட போது அறிவாலயத்தில் கூடினீர்களே - அது மாதிரி? அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டால் மட்டும் தான் ஒற்றுமையா? மக்கள் பாதிக்கப்பட்டால் இல்லையா?
11. அகில இந்திய அளவில் மதுவிலக்கு பற்றி உங்கள் கொள்கை என்ன என்பதை உங்கள் தேர்தல் அறிக்கைகளில் விளக்க முடியுமா?
மேற்கூறிய விஷயங்களைப் பரிசீலித்து அவற்றுக்கு விடை கண்டு தங்கள் போராட்டத்தின் போக்கை மாற்றிக் கொண்டீர்களேயானால் - அரசாங்கமே அல்ல - உங்களில் ஒரு சிலர் நம்பாத ஆண்டவனே வந்தாலும் உங்கள் போராட்டத்தின் வெற்றியைத் தடுக்க முடியாது...
உங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற உங்களுள் ஒரு சக தமிழனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
எனது கேள்விகளை ஆழமாகப் பரிசீலிப்பீர்கள் என நம்பும்,
சக தமிழர்களின் நலன் விரும்பி...
அன்புள்ள அம்மா, உங்களால் மட்டுமே மது விலக்கை அமல்படுத்த முடியும்.. ஒரு தமிழனின் திறந்த மடல்!