"தமிழ் இம்சை"ன்னு ஒன்னு இருக்கு... உளுந்தூர்ப்பேட்டையில் நக்கலடித்த நடிகர் ஆனந்த்ராஜ்!
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது நடிகர் ஆனந்த்ராஜ் பாஜக மாநில தலைவர் தமிழிசையை தமிழ் இம்சை என்று கிண்டல் செய்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக தலைமைக் கழக பேச்சாளரும், நடிகருமான ஆனந்த்ராஜ் உளுந்தூர்பேட்டையில் குமரகுருவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
தேர்தலில் முதலிடத்திற்கு போட்டியில்லை. முதலிடம் ஜெயலலிதாவுக்கே. இரண்டாவது இடத்திற்கே கடும் போட்டி நிலவுகிறது. அதாவது எதிர்கட்சி வரிசையில் யார் அமர்வது என்பதற்கு போட்டி. ஸ்டாலின் நான் தான் எதிரி என்கிறார், விஜயகாந்த் நான் தான் என்கிறார், நேற்று கட்சி ஆரம்பித்த சீமான் நான் தான் எதிரி என்கிறார்.
இந்த தமிழ் இம்சைன்னு ஒன்னு இருக்கு, ஓ அது தமிழிசையா? மன்னித்துவிடுங்கள். அது நான் தான் எதிரி, நான் தான் ஆளுங்கட்சிக்கு போட்டி என சொல்கிறாங்க. எல்லாரும் மாறி மாறி சொல்கிறார்கள். ஆனால் எந்த போட்டியும் முதலிடத்திற்கு இல்லை என்றார்.