ரஜினியையே கட்டிவச்சு 'தோல உரிச்ச' எங்களுக்கு ராமதாஸ் சாதாரணம்: ஆனந்தராஜ் அட்டாக்
திருவாரூர்: ரஜினிகாந்தையே கட்டி வச்சு தோல உரிச்சவங்க நாங்க, எங்களுக்கு ராமதாஸ் எல்லாம் சர்வ சாதாரணம் என்று திருவாரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளவர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம். இவரை ஆதரித்து நடிகர் ஆனந்தராஜ் பேசும்போதுதான் இதுபோன்ற கருத்தை தெரிவித்தார்.
ஆனந்தராஜ் பேசியதிலிருந்து சில முக்கிய துளிகள் இதோ: மக்களே ஒரு வேளை நீங்கள், கருணாநிதிக்கு ஓட்டு போட்டு மே 19ம் தேதி ஓட்டு எண்ணும் போது வெற்றி பெற்று அந்த வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலே இறந்து போய் விட்டால் மீண்டும் இங்கே இடைத்தேர்தல் வந்துவிடும்.
கருணாநிதி சாதனை
அப்படி ஒரு நிலைமை வர வேண்டும் என்பதற்காக வாக்களிக்க வேண்டுமா? உலகத்திலே யாருமே செய்யாத ஒரு சாதனையை கருணாநிதி செய்ய இருக்கிறார். உலகத்திலே 92 வயதிலே உலகிலே யாரும் போட்டி போட்டது கிடையாது.
கண்டிக்கவில்லை
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உங்களை வைத்துக் கொண்டு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவதூறாக பேசுகிறார். நீங்கள் கண்டித்திருக்க வேண்டாமா? வயதில் மூத்தவர், முதியவர் ஆயிற்றே நீங்கள் சொல்லி இருக்க வேண்டாமா?
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்
ஆனால், கருணாநிதிதான், இப்படி பேசுவதற்காகவே இளங்கோவனை வரச் சொல்லி இருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஞானதேசிகன் இருந்தபோது அம்மாவை, தாக்கிப் பேச முடியுமா என்று கருணாநிதி கேட்டுள்ளார். ஆனால், ஞானதேசிகனோ, நான் நல்ல குடும்பத்திலே பிறந்தவன் என்னால் பேச முடியாது என்று கூறியுள்ளார். இதை அவரே தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
நாய் கோபிக்கும்
எனவே, கருணாநிதி தேர்வு செய்தவர்தான் இளங்கோவன். தன் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை நாய் என்று அழைக்கும் இப்படிப்பட்ட இளங்கோவனை, நாம் நாய் என்று சொல்லக் கூடாது, பின், நாய் நம்மை கோபித்துக் கொள்ளும்.
ஆரோக்கியமாக உள்ளார்
அம்மா தனது காரில் இருந்து தானே இறங்கி, அவரே வேட்புமனு தாக்கல் செய்து, அவரே திரும்ப வந்து, அவரே காரில் திரும்ப சென்றார். அப்படிப்பட்ட அவரைப் பார்த்து ஆர்.கே.நகர் வெள்ளம் பாதித்த பகுதிகளை இறங்கி பார்வை இடவில்லை என்று எப்படிக் கேட்க முடியும்.
புளியமரம்
இந்த சாதி சங்கத்தை நான் கட்சியாக மாற்றுகிற போது, என் கட்சியைச் சார்ந்தவர்கள் யாராவது பொறுப்பிற்கு வந்தால் புளியமரத்தில் கட்டி வைத்து என்னை சவுக்கால் அடியுங்கள் என்று ராமதாஸ் சொல்லியிருந்தார். ஆனால், மரத்துக்கு ஒரு நாள் கட்டி வச்சு அடிச்சா கூட ஒன்றைரை வருடத்திற்கு இங்கேயே இருக்க வேண்டும்
ரஜினியை அடிச்சேன்
அடிக்கிறதுல நாங்க கில்லாடி. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தையே கட்டி வச்சு தோல உரிச்சவங்க நாங்க., எங்களுக்கு ராமதாஸ் எல்லாம் சர்வ சாதாரணம்.
மீசை
நேற்று தனியாக எங்கள் அம்மா வேட்புமனு தாக்கல் செய்தார். விஜயகாந்த், அதேபோல காரில் வந்து தனியாக இறங்கி, நடந்து, படிகட்டு ஏறி, அவர் இருக்கையில் அமர்ந்து, அங்கிருந்து மைக்கை பிடித்து, அவர் கூட்டணியில் இருக்கக் கூடிய ஐந்து கட்சித் தலைவர்களின் பெயரைச் சொல்லி, ஐந்து கட்சிகளைச் சொல்லி, அவர்களின் சின்னங்களைச் சொல்லி ஓட்டு கேட்டால் நான் எனது ஒரு பக்கத்து மீசையை எடுத்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆனந்தராஜ் பேசினார்.