தருமபுரியில் அவ்வையார் பெயரில் புதிய பல்கலைக்கழகம் - அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!
தருமபுரியில் அவ்வையார் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : தருமபுரியில் பெண்களுக்கு உயர்கல்வி கிடைக்கும் வகையில் அவ்வையார் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் புறக்கணிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக தருமபுரி தொடருகிறது. தருமபுரி மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக, அம்மாவட்டம் முன்னேறிவிடக் கூடாது என்பதில் தான் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றுவது தான் அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் கடமையாக இருந்து வருகிறது.
வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக அதிக அளவில் தொழிலாளர்கள் இடம்பெயரும் மாவட்டங்களில் தருமபுரி தான் முதலிடத்தில் உள்ளது. தருமபுரி மாவட்டத்திலிருந்து சுமார் 5 லட்சம் பேர் பெங்களூர் சென்று பிழைத்து வருகின்றனர். காலம் காலமாக பின்தங்கியுள்ள தருமபுரி மாவட்டத்தை முன்னேற்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்; உயர்கல்வித்துறை அமைச்சகம் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் கைகளில் தான் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது என்றாலும், அவர்களுக்கு ஊழல் செய்யத் தான் நேரம் இருக்கிறதே தவிர, இக்கோரிக்கையை நிறைவேற்ற மனம் வரவில்லை.
தரம் உயர்த்த வேண்டும்
சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்புக்கான விரிவாக்கப்பட்ட மையம் தருமபுரியில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் மொத்தம் 8 பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகின்றன. இவை தவிர 6 பாடப் பிரிவுகளில் முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது. தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் இம்மையத்தை புதிய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும். தருமபுரியில் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்தை இணைப்புப் பல்கலைக்கழகமாக அறிவிக்காமல் ஒருமைப் பல்கலைக்கழகமாக நடத்தலாம். இதன்மூலம் நிர்வாகச் சுமை இல்லாமல் ஆராய்ச்சியில் மட்டும் கவனம் செலுத்த முடியும்.
சமூக நலன் சார்ந்த ஆய்வுகள்
தருமபுரி பட்ட மேற்படிப்பு விரிவாக்கப்பட்ட மையத்தில் இப்போது 8 பிரிவுகளில் முதுநிலைப்பட்டமும், 6 பிரிவுகளில் முனைவர் பட்டமும் வழங்கப்படுகிறது. புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் போது குறைந்தது 30 பாடப் பிரிவுகளில் முதுநிலைக் கல்வி கற்பிக்கப்படுவதுடன், அதே எண்ணிக்கையிலான பாடப்பிரிவுகளில் முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொள்ளப்பட வேண்டும். மற்ற பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படுவதைப் போன்ற வழக்கமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மாற்றாக, சமூக நலன் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சி ஆலயமாக புதிய பல்கலைக்கழகம் திகழ வேண்டும்.
ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்
கல்வி, வேலைவாய்ப்பு, மனித வாழ்நிலை மேம்பாட்டுக்குறியீடு உள்ளிட்ட அனைத்திலும் தருமபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில், அவற்றை மேம்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுகளில் புதிய பல்கலைக்கழகம் கவனம் செலுத்த வேண்டும். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கிடைக்கும் குடிநீரில் புளோரைடு அதிக அளவில் கலந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது பற்றி இதுவரை பெரிய அளவில் ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், அது குறித்த ஆய்வுகளில் புதிய பல்கலைக்கழகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மொத்தத்தில் தருமபுரி & கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பாதை வகுத்துக் கொடுக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையமாக புதிய பல்கலை. திகழ வேண்டும்.
ஆராய்ச்சி கல்வியாளர்
பல்கலைக்கழகங்களின் நோக்கம் கல்வி வளர்ச்சி தான் என்றாலும் கூட, தருமபுரியில் அமைக்கப்பட உள்ள புதிய பல்கலைக்கழகத்தின் நோக்கம் சமூக வளர்ச்சியுடன் கூடிய கல்வி வளர்ச்சியாக இருக்க வேண்டும். இந்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், சமூக அக்கறையும், ஆராய்ச்சியில் ஈடுபாடும் கொண்ட கல்வியாளர் ஒருவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும்.
அவ்வவையார் பெயரில்
புதிய பல்கலைக்கழக வளாகம் அமைப்பதற்காக தருமபுரியில் 150 ஏக்கர் நிலம் ஒதுக்குவதுடன், நிறுவுதல் செலவுக்காக ரூ.500 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அத்துடன், அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றவரும், ‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்' என்று கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மூதாட்டி அவ்வையாரின் பெயரை புதிய பல்கலைக்கழகத்திற்கு அரசு சூட்ட வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.